பதிவு செய்த நாள்
29
மே
2025
10:05
தஞ்சாவூர்; பாபநாசம் அருகே, ஆடுதுறை கிராமத்தில் அமைந்திருக்கும் ஜகத்ரட்சகப் பெருமாள் கோயிலின் தல விருட்ச மரம் முறிந்தது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ஆடுதுறை கிராமத்தில், 108 திவ்ய தேசங்களில், 25வது திவ்ய தேசமாக விளங்கும் ஜகத்ரட்சகப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலின் தல விருட்சம், பலா மரமாகும். நேற்று காலை, கோவில் பட்டாச்சாரியார் கஸ்துாரி ரங்கன், மெய் காவலர் ராஜேஷ் ஆகியோர், கோவில் நடை திறந்து பார்த்த போது, கோவிலின் தல விருட்சமான, பழமையான பலா மரத்தின் ஒரு பகுதி அடியோடு முறிந்து, ஆண்டாள் சன்னிதியின் மேல் ஒரு பகுதியும், மரத்தின் மற்றொரு பகுதி தரையிலும் விழுந்து கிடந்தது. இதையடுத்து, அவர்கள், கோவில் செயல் அலுவலர் பார்த்திபன், தக்கார் குணசுந்தரி, வி.ஏ.ஓ., ஜோதி பாண்டியன் ஆகியோருக்கு தகவல் அளித்தனர். பின், பலா மரம் அகற்றப்பட்டது. தல விருட்ச மரம், இரண்டாக பிளந்து விழுந்தது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.