பதிவு செய்த நாள்
30
மே
2025
03:05
மேலூர்; மேலூரில் நடைபெறும் வைகாசி மாத மாங்கொட்டை திருவிழாவிற்கு திருவாதவூரிலிருந்து திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் எழுந்தருளும் திருவிழா இன்று வாஸ்து சாந்தியுடன் துவங்கியது.
நாளை மே 31 கொடியேற்றம் நடைபெறும். ஜூன் 1 முதல் 3 வரை சுவாமி வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பஞ்ச மூர்த்திகளுடன் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் ஜூன் 4 மேலூருக்கு எழுந்தருள்கிறார். இத்திருவிழா மாங்கோட்டை திருவிழா என்று அழைக்கப்படுகிறது. ஜூன் 7 திருக்கல்யாணமும், ஜூன் 8 தேரோட்டமும் நடைபெறும். ஜூன் 9 கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறும். இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் கிருஷ்ணன், பேஷ்கார் ஜெயபிரகாஷ் செய்திருந்தனர்.
புராண வரலாறு : ஆங்கிலேயர் காலத்தில் மேலூரில் ஒரு சிவனடியார் இருந்தார். தினமும் 8 கி.மீ., திருவாத வூருக்கு நடந்து சென்று சிவனை தரிசிப்பார். அவரது சீடராக தாசில்தார் இருந்தார். சிவனடியாருக்கு வயதானதால் திருவாதவூர் செல்ல முடியவில்லை. அதனால் தாசில்தார் மேலூரில் சிவலிங்கம் அமைத்துக் கொடுத்தும் திருவாதவூருக்கு செல்ல முடியாதது சிவனடியாருக்கு கவலையாக இருந்தது. அப்போது சிவன், சிவனடியார் கனவில் தோன்றி நீ இருக்கும் இடத்திற்கு நானே வருவேன் என கூறியுள்ளார். அதன் பேரில் திருவாதவூரிலிருந்து சுவாமிகள் மேலூருக்கு எழுந்தருளுகிறார். அதனால் தான் இன்றும் மேலூர் நுழைவாயிலில் முதல் மண்டகப்படியில் தாசில்தாருக்கு முதல் மரியாதை வழங்கப்படுகிறது.