பதிவு செய்த நாள்
31
மே
2025
02:05
மேட்டுப்பாளையம்; சிறுமுகை அருகே ஓதிமலை அடிவாரத்தில் உள்ள மடத்தில், சுந்தர சிவநேச அடிகளாருக்கு பட்டாபிஷேகம் விழா நடந்தது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே இரும்பறை ஓதிமலை மேல், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஐந்து முகத்தோற்றத்தில் முருகப்பெருமானின் கோவில் உள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் சுந்தர சிவநேச அடிகளாரின் மடம் உள்ளது. இங்கு சுந்தர சிவநேசர் அடிகளார் திருமடம் திறப்பு விழா, சேக்கிழார் குருபூஜை விழா, பேரூர் அடிகள் 24ம் குருமகா சன்னிதானம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழா, சிவநேச அடிகளார் சன்னிதானம் பட்டாபிஷேக விழா என நாற்பெரும் விழா நடந்தது.
நேற்று மங்கள இசை முழங்க கல்யாண சுந்தரம் ஓதுவார்கள் தலைமையில், திருமுறைப் பாராயணம், திருவிளக்கு ஆனைந்து, பெருமந்திருமகள் நிலத்தேவர் ஆகிய வழிபாடுகளுடன் விழா துவங்கியது. மாலையில் முதல்கால வேள்வி பூஜை நடந்தன. இன்று காலை இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. சின்னவேடம்பட்டி ஜெய்கணேஷ், கோவிந்தராஜ் ஆகியோர் இசை கலைஞர்களின் தலைமையில், 51 தவில், 51 நாதஸ்வரங்களின் இசையுடன் திருமடம் திறப்பு விழா, சேக்கிழார் குருபூஜை மலர் வழிபாடு, பேரூர் அடிகள் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு மலர் வழிபாடு ஆகியவை நடந்தன. அதைத் தொடர்ந்து குரு மகா சன்னிதானம் சிவநேச அடிகளாரின் பட்டாபிஷேக விழா நடந்தது. முன்னதாக சிவன், பார்வதி, விநாயகர், முருகர் ஆகிய சுவாமிகளுக்கும், மற்றும் சேக்கிழாருக்கும் சிறப்பு பூஜைகள் செய்தனர். இந்த விழாவில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் ராமனந்தா குமரகுருபர சுவாமிகள், பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார், தென்சேரிமலை ஆதீனம் முத்து சிவராம சுவாமி அடிகளார் உள்பட ஏராளமான ஆதீனம் அடிகளார்கள் பங்கேற்று அருளாசி வழங்கினர். இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.