சிவகங்கை; காளையார்கோவில் சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் மே 31 அன்று கொடியேற்றத்துடன் வைகாசி விசாக திருவிழா துவங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். திருவிழாவின் 9ம் நாளான இன்று காலை 8:15 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் பிரியாவிடையுடன் சோமேஸ்வரர், மற்றொரு தேரில் சவுந்திரநாயகி அம்பாள் எழுந்தருளினர். சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று காலை 10:15 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, வைகாசி விசாக விழா தேரோட்டம் துவங்கியது. நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து மீண்டும் காலை 11:30 மணிக்கு நிலையை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனர். தேவஸ்தான கண்காணிப்பாளர் பாலசரவணன், கோயில் ஸ்தானிகம் ரத்தின காளீஸ்வர குருக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பத்தாம் நாளான காலை, இரவில் தெப்பம் கண்டருளல், இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறும்.