திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான மலை மேலுள்ள காசி விஸ்வநாதர் கோயில் உட்பட ஐந்து உப கோயில்களுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடக்கிறது. முதல் கட்டமாக உபகோயில்களான சொக்கநாதர் கோயில், பழனி ஆண்டவர் கோயில், பாம்பலம்மன் கோயில், அங்காள பரமேஸ்வரி குருநாதசுவாமி கோயில்களில் அறங்காவலர் குழுவினர் செலவில் ஏப். 16ல் கும்பிஷேகம் நடந்தது.
இரண்டாம் கட்டமாக மலை மேல் உள்ள காசி விசுவநாதர் கோயில், சரவணப் பொய்கை ஆறுமுக நயினார் சுவாமி கோயில், மலைக்குப் பின்புறம் பால் சுனை கண்ட சிவபெருமான் கோயில், சப்த கன்னிமார் கோயில், படிக்கட்டு விநாயகர் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு மே 4ல் பாலாலயம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகம்: ஐந்து உப கோயில்களிலும் நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. காலை 5:55 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட குடங்களில் இருந்த புனித நீர் காசி விஸ்வநாதர் கோயில் விமானம், முருகன் கோயில் விமானங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஆறுமுக நைனார் சுவாமி கோயில், படிக்கட்டு விநாயகர் கோயில் விமானங்கள், பால் சுனை கண்ட சிவபெருமான் கோயில் மூலவர், சப்த கன்னிமார் கோயில் மூவலர்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர்களுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வம், பொம்மதேவன், ராமையா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், மதுரை தி.மு.க., தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலாஜி பங்கேற்றனர்.