பதிவு செய்த நாள்
09
ஜூன்
2025
04:06
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள, முருகர் கோவில்களில் வைகாசி விசாகத் திருவிழா நடைபெற்றது.
சிறுமுகை பழத்தோட்டத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த, பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா நடந்தது. காலை 6:00 மணிக்கு கோவில் நடை திறந்து திருப்பள்ளி எழுச்சியும், அதைத் தொடர்ந்து பால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு பவானி நதியில் இருந்து, 108 குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு தாலிச் சரடு வழங்கப்பட்டது. மதியம் மூலவருக்கு அலங்கார பூஜை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டினர், கிருத்திகை வழிபாட்டு குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோரம் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, சுப்பிரமணியர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, காலையில் கோவில் நடை திறந்து, முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து காலை 10:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அதைத் தொடர்ந்து மகா தீபாராதனையும் நடந்தது. அப்போது பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் எழுப்பி வழிபட்டனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே சக்தி விநாயகர் கோவிலில், பாலமுருகன் சன்னதியில் உள்ளது. வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, முருக பெருமானுக்கு பால், தயிர், தேன் என 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. காரமடை அருகே குருந்தமலையில் ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான, குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வனிதா மற்றும் அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.