பதிவு செய்த நாள்
10
ஜூன்
2025
10:06
புதுக்கோட்டை; அருணகிரிநாதருக்கு, முருகப்பெருமான் காட்சி கொடுத்து, அஷ்டமா சித்தி வழங்கி திருப்புகழ் பாடச்செய்த தலமாக, விராலிமலை சுப்ரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது. இக்கோவிலில், ஆண்டு தோறும் வைகாசி விசாக திருவிழா, கந்த சஷ்டி விழா, தைப்பூச திருவிழா உட்பட பல்வேறு திருவிழாக்கள் விமர்சியாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வைகாசி திருவிழா முன்னிட்டு, 1ம் தேதி கொடி ஏற்றி வைத்து ரக்ஷாபந்தனம் என்ற காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு, விநாயகர் சிறிய தேரிலும், சுப்ரமணியசுவாமி வள்ளி தெய்வானையுடன் பெரிய தேரிலும் எழுந்தருளினார். தொடர்ந்து, காலை 9:45 மணிக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், முன்னாள் அமைச்சரும் தொகுதி எம்.எல்.ஏ.வான விஜயபாஸ்கர் ஆகியோர் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். பக்தர்களின், ‘அரோகரா’ கோஷத்துடன், நான்கு ரத வீதிகளில் தேர் வலம் வந்து, நிலையை அடைந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.