பதிவு செய்த நாள்
10
ஜூன்
2025
12:06
மேட்டுப்பாளையம்: தோலம்பாளையத்தில் உள்ள சோமேஸ்வரி உடனமர் சோமலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
காரமடை அடுத்த தோலாம்பாளையத்தில் புதிதாக, சோமேஸ்வரி உடனமர் சோமலிங்கேஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலில் விநாயகர், முருகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சண்டிகேஸ்வரர், காலபைரவர், வீரமாஸ்தியம்மன் ஆகிய சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. கோவில் கும்பாபிஷேக விழா மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. சர்வ சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, தீர்த்த குடங்கள், கோபுர கலசங்கள் மற்றும் முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்பு முதல் கால வேள்வி பூஜை துவங்கியது. இரண்டாம் நாள் இரண்டாம் கால வேள்வி பூஜையும், சோமலிங்கேஸ்வரர், சோமேஸ்வரி மற்றும் பரிவார் மூர்த்திகளுக்கும், கோபுர கலசத்திற்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில் மூன்றாம் கால வேள்வி பூஜையும், 1008 அர்ச்சனையும் செய்யப்பட்டது. மூன்றாம் நாள் நான்காம் கால யாக பூஜையும், கோபுர கலசம் அமைத்தலும், மூலவர் மற்றும் பரிவார் மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் மருந்து சாத்துதலும், மாலையில் ஐந்தாம் யாக வேள்வி பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து நான்காம் நாள் ஆறாம் கால வேள்வி பூஜையும், யாகசாலையில் இருந்து மூலவர் சன்னதிக்கு சக்தியை ஏற்றுதல் ஆகிய பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து யாக சாலையிலிருந்து தீர்த்து குடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து, கோபுர கலசத்திற்கும், சோமேஸ்வரி உடனமர் சோமேஸ்வரருக்கும், பரிவார் மூர்த்திகளுக்கும் தீர்த்தம் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மகா அபிஷேகமும், அலங்கார பூஜை, தீபாரதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. யாக வேள்வி பூஜைகளை அஸ்வின் சிவாச்சாரியார் குழுவினர் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை சோமகவுடர் மலவீர் குல மக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.