பதிவு செய்த நாள்
28
ஜூன்
2025
10:06
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில், மர்ம நபர் தீ குச்சியை பற்ற வைத்து போட்டதில் ரூபாய் நோட்டுகள் கருகியதால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவார் குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவிலில், 28.48 கோடி ரூபாய் செலவில் திருப்பணி நடந்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவிலில் திருப்பணி, அன்னதானம், பொது உண்டியல் என, பல்வேறு இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கோவிலில் உள்ள ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் அருகில் உள்ள திருப்பணி உண்டியலில் இருந்து, நேற்று காலை 9:15 மணிக்கு புகை வந்துள்ளது. பதற்றமடைந்த கோவில் ஊழியர்கள், உண்டியலுக்குள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதையடுத்து, நேற்று மாலை, ஹிந்து சமய அறநிலைத் துறை ஆய்வாளர் அலமேலு, செயல் அலுவலர் முத்துலட்சுமி முன்னிலையில், உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. இதில், சில ரூபாய் நோட்டுகள் கருகி இருந்தன. பெரும்பாலான நோட்டுகள் நனைந்து இருந்ததால், கோவில் ஊழியர்கள் நனைந்த நோட்டுகளை துணியில் வைத்து உலர்த்தினர். திருப்பணிக்காக உண்டியலில் செலுத்திய காணிக்கை தொகை தீயில் கருகியது பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி கூறியதாவது: கோவில் உண்டியலில் நேற்று காலை, மர்ம நபர்கள் தீயிட்ட குச்சியை போட்டுள்ளதால் உண்டியலில் இருந்து புகை வந்துள்ளது. கோவில் ஊழியர்கள் உடனே, உண்டியலுக்குள்தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர். இதனால், உண்டியலில் இருந்த ரூபாய் நோட்டுகள் அதிகம் சேதமாகவில்லை. சில நோட்டுகள் சேதமாயின. நல்ல நிலையில் உள்ள ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் என, மொத்தம் 90,918 ரூபாய் கோவிலுக்கு வருவாய் கிடைத்துள்ளது. உண்டியலுக்கு தீ வைத்தது குறித்து, கோவிலில் உள்ள, ‘சிசிடிவி’ கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் ஆய்வு செய்து வருகிறோம். போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.