பதிவு செய்த நாள்
28
ஜூன்
2025
11:06
திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீ அய்யப்பன் கோவில் கும்பாபிஷேக விழா, ஜூலை 2ம் தேதி நடக்கிறது; பூர்வாங்க பூஜைகள் நேற்று துவங்கியது.
திருப்பூர், காலேஜ் ரோடு பகுதியில் உள்ள ஸ்ரீஅய்யப்பன் கோவிலில், சபரிமலை அய்யப்பன் கோவிலில் இருப்பது போல், தாந்த்ரீக முறைப்படி தினசரி பூஜைகள் நடந்து வருகின்றன. கோவிலுக்கு நான்கு கும்பாபிஷேகம் நடந்துள்ள நிலையில், ஐந்தாவது கும்பாபிஷேகம், ஜூலை 2ம் தேதி காலை 6:10 முதல் 7:10 மணி வரை நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழா பூர்வாங்க பூஜைகள் நேற்று துவங்கின. சபரிமலையில் இருந்து வந்திருந்த தந்திரிகள், கோவில் தந்திரிகள் குழுவினர், தனியே குடில் அமைத்து அதில் முளைப்பாரி அமைத்து பூஜைகளை துவக்கினர். முன்னதாக கொடிமரம் அருகே தீபம் ஏற்றி வைத்து அய்யப்பனை வணங்கி பூஜைகள் துவங்குவதற்கான உத்தரவு பெறப்பட்டது. ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட் தலைவர் நாச்சிமுத்து, பொதுச் செயலாளர் மணி, பொருளாளர் முருகேசன், துணைத்தலைவர் மோகன்ராஜ் உள்ளிட்டோர், அய்யப்ப சுவாமிக்கு புதிய வஸ்திரம் உள்ளிட்ட பூஜைபொருட்கள் படைத்து, கும்பாபிஷேக விழாவை துவக்க அனுமதி கோரி வழிபட்டனர். இன்று முதல் தினமும் அதிகாலை 5:00 மாலை 5 :00 மணி என இருவேளையும் கணபதி ஹோமம் உள்ளிட்ட கும்பாபிஷேக விழா பூஜைகள், சபரிமலை கோவிலில் நடப்பது போல் தாந்த்ரீக முறைப்படி நடக்கும் என தந்திரிகள் தெரிவித்தனர்.