காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அருகே, தலை இல்லாத தீர்த்தங்கரர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பூசிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் வீடு கட்டுவதற்கு நேற்று முன்தினம் பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது, பீடத்தில் அமர்ந்திருந்த நிலையில், தலை இல்லாத கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்த ஊராட்சி நிர்வாகத்தினர் சிலையை மீட்டு வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து, வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய தலைவர் அஜய்குமார் கூறியதாவது: பூசிவாக்கம் கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தீர்த்தங்கரர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலை, அபூர்வமான அமைப்புடன் செதுக்கப்பட்டுள்ளது. சதுர பீடத்தில், இடது கால் மீது, வலது கால் போட்டு இரு கால்களை மடக்கியவாறு உள்ளது. அதேபோல, இடது கை மீது வலது கை வைத்து, ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருக்கும் வகையில் உள்ளது. முதுகு தண்டு வடம் செங்குத்தாகவும், இடுப்பு மெலிந்தவாறு செதுக்கப்பட்டு உள்ளது. சிலை ஆடை, ஆபரணங்கள் இன்றி இருப்பதால், 10ம் நுாற்றாண்டு சிலை என, தொல்லியல் கண்காணிப்பாளர் ரமேஷ் மற்றும் உதவி கல்வெட்டு ஆய்வாளர் நாகராஜன் உறுதிப்படுத்தி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.