திருப்புல்லாணி ஆதி ஜெகநாதபெருமாள் கோயிலில் அன்னக்கூடை உற்ஸவம்; ஆக., 3ல் நடக்கிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2025 05:07
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் வரும் ஆக., 3 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4:00 மணிக்கு அன்னக்கூடை உற்ஸவம் நடக்கிறது. பொதுவாக பெருமாள் மற்றும் விஷ்ணு கோயில்களில் நடக்கும் உற்ஸவங்களில் அன்னக்கூடை உற்சவம் சிறப்பு வாய்ந்ததாகும். இதை அன்ன பாவாடை உற்ஸவம் என்றும் சொல்வதுண்டு. புராணத்தில் கோவர்த்தன மலையை ஒரு விரலால் தூக்கிப் பிடித்த கண்ணபிரானுக்கு நன்றி செலுத்தும் விதமாக இவ்விழா கொண்டாடப்படுகிறது. இந்த உற்ஸவத்தை முன்னிட்டு பல்வேறு வகையான இனிப்பு, கார வகைகள், பட்சண வகைகள் மற்றும் விதவிதமான சாதங்கள் ஆகியவற்றை உற்ஸவர் பெருமாளுக்கு முன்பாக அதிகளவு நெய்வேத்தியமாக வைக்கப்படுகின்றன. அதிக பொருட்செலவில் செய்யப்படும் இது போன்ற பிரசாதங்களை பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வருகிற ஆக., 3 ஞாயிறு மாலை 4:00 மணிக்கு பெருமாள் கோயிலில் வழங்கிட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தில் ஜீயர் ஸ்ரீ வராக மகா தேசிகன் சுவாமி தலைமையில் நடக்க உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் திருப்புல்லாணியில் உள்ள ஆண்டவன் ஆசிரம சீடர்கள் மற்றும் மேனேஜர் ரகுவீர தயாள் ஆகியோர் செய்து வருகின்றனர்.