மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், யஜுர் உபாகர்மா எனும் பூணூல் அணியும், ஆவணி அவிட்ட வைபவம் நடந்தது.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு இன்று அதிகாலையில் கோவில் நடை திறந்து, மூலவருக்கு திருமஞ்சனம், கால சந்தி பூஜை செய்யப்பட்டது. பின்பு மகா மண்டபத்தில் விஸ்வக்சேனர், ஆராதனம், புண்ணியாவசனம், லட்சுமி நாராயண, ஆவாகனம் ஆகியவை அரங்கநாத பெருமாளுக்கு சேவிக்கப்பட்டது. பின்பு வேத மந்திரங்கள் முழங்க, அரங்கநாதருக்கு எக்யோப விதம் எனும் பூணூல் அணிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மண்டபத்தில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று உபஸ்தானம், காமோகார் சஷீத் ஜப சங்கல்பம் ஆகியவை நடந்தன. வேத மந்திரங்களை வெங்கடேச பிரசாத் ஜெபிக்க மற்றவர்கள் பூணூல் அணிந்து கொண்டனர். இதை அடுத்து உச்சி கால பூஜை, சற்று முறை சேவிக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் காட்டூர் ஐயப்பன் பஜனை மண்டபத்தில் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் சுப்பிரமணியம் வேத மந்திரங்களை கூறினார். அதைத் தொடர்ந்து ஆவணி அவிட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிராமணர்கள், பூணூல் அணிந்து கொண்டனர்.