களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா; பூஜை பொருள், சிலைகள் வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்..!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2025 11:08
எப்போதுமே விநாயகர் சதுர்த்தி தமிழகம் எங்கும் களைகட்டும். இந்த வருடமும் அப்படித்தான். இந்த வருடம் விநாயகர் குடைகளில் நிறைய புதுமைகள் இடம் பெற்றிருந்தன. முதியவர்கள் பலர் மாவிலை எருக்கம்பூ ஒலைத்தோரணம் போன்றவைகளை விற்பனை செய்து நாங்கள் இப்போதும் உழைத்துதான் சாப்பிடுகிறோம் என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தனர். களிமண் பிள்ளையார் என்றாலும் அதையும் களையாக்கமுடியும் என்று தங்கள் கைவண்ணத்தை காணபித்து களிமண் பிள்ளையார்களை அழகுபடுத்தியிருந்தனர். குழந்தைகள் பலரும் பெற்றோர்களுக்கு ஆதரவாக குடை விற்பது தோரணம் விற்பது போன்றவற்றில் ஈடுபட்டனர், எது வேலை ஏறினாலும் மக்கள் வாங்கிச் செல்கின்றனர் ஆனால் இந்த எருக்கம் பூ மாலை விலையை மட்டும் பத்து ரூபாய்க்கு மேல் கொடுத்து வாங்க மாட்டேன் என்கிறார்கள் என்று அதனை விற்றவர்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். பூஜைக்கு தேவையான பழங்கள் பூக்கள் உள்ளீட்ட பொருட்கள் எல்லாம் காம்போ ஆபரில் சில இடங்களில் விற்று வருகின்றனர். விதம் விதமாய் காட்சியளித்த விநாயகர் எல்லாவற்றையும் புன்னகை பூக்க பார்த்துக் கொண்டு இருந்தார். கடைகள் எங்கும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை அமோகமாக நடக்கிறது. நாடு முழுவதும் ஆக. 27 ல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிங்கம்புணரி பகுதியில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை அமோகமாக நடக்கிறது. அரை அடி முதல் ஒரு அடி வரை பல்வேறு வடிவம் வண்ணங்களில் வீடுகளில் செய்யப்பட்ட சிலைகள் நகரில் பல்வேறு இடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. ரூ. 50 முதல் 500 வரை சிலைகளுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர்.