பாலக்காடு; ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் மூலவருக்கு, "காழ்ச்சகுலை சமர்ப்பணம் என்ற நேந்திரன் பழம் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்தது.
கேரள மாநிலத்தில், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு உத்திராடம் நாளான இன்று காலை சிறப்பு தாழ்ச்சீவேலி என்ற செண்டை மேளம் முழங்க, யானை மீது உற்சவர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோவில் தங்கக் கொடிமரம் கீழ், பக்தர்கள் மூலவருக்கு காணிக்கையாக, நேந்திரன் பழம் சமர்ப்பிக்கும் "காழ்ச்சகுலை சமர்ப்பணம் என்ற நிகழ்ச்சி நடந்தது. கோவில் மேல்சாந்தி பிரஹ்மஸ்ரீ கவபிரா மாறத்து மனை அச்சுதன் நம்பூதிரி, மூலவருக்கு முதல் பழ கொத்து காணிக்கையாக சமர்ப்பித்தார். இதையடுத்து, தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயன், குழு உறுப்பினர்களான பிரஹ்மஸ்ரீ மல்லிச்சேரி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு, மனோஜ், விஸ்வநாதன், கோவில் நிர்வாகி பிரமோத் ஆகியோர் பழ கொத்து காணிக்கையாக சமர்ப்பித்தனர். அதன் பின், பக்தர்கள் மூலவருக்கு பழ கொத்து காணிக்கையாக சமர்ப்பித்து வழிபட்டனர். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்தப் பழ கொத்து, திருவோணம் நாளான நாளை நடக்கும் "ஒண சத்யா என்ற சிறப்பு அன்னதானத்தில் பழம் பாயாசம் தயாரிக்க பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளதாக தேவஸ்தானம் நிர்வாக குழுவினர் தெரிவித்தனர்.