பதிவு செய்த நாள்
28
டிச
2012
04:12
மனதில் இருப்பதை மறைக்க விரும்பாத கும்பராசி அன்பர்களே!
புத்தாண்டில் கேது மூன்றாம் இடத்தில் அமர்ந்து மிகுந்த அனுகூல பலன்களை வழங்குகிறார். சனி, ராகு பாக்ய ஸ்தானத்தில் மாறுபட்ட குணத்துடன் இருந்தாலும் குரு மே 28ம் நாள் மிதுனத்திற்கு பெயர்ச்சியாகி உங்கள் ராசியை ஒன்பதாம் பார்வையாக பார்க்கிறார். இதனால் வாழ்க்கை வளம்பெறும்.பேச்சில் அடிக்கடி கடுமை உண்டாகும். நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. உழைப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். விடாமுயற்சியுடன் உழைத்து தாராள அளவில் வருமானம் பெறுவீர்கள். கேதுவின் மூன்றாம் இட அமர்வு வருடம் முழுவதும் முருகப்பெருமானின் நல்லருளைப் பெற்றுத்தரும். சமூக நலனில் அக்கறை கொண்டு சில பணிகளை செய்வீர்கள். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும்.வீடு, வாகனத்தில் வருட முற்பகுதியில் அசவுகரியமும் பராமரிப்புச்செலவும் அதிகமாகும். குரு பெயர்ச்சிக்குப்பின் புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. விரும்பிய படி மணவாழ்வு அமையும். திருமண வைபவம் ஜாம் ஜாம் என விமரிசையாக நடந்தேறும். உறவினர்களிடம் குடும்ப விவகாரங்கள் பேசுவதில் மென்மையான போக்கை கடைபிடிப்பது நல்லது. புத்திரர் வருட முற்பகுதியில் கொஞ்சம் பிடிவாத குணத்துடன் செயல்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பிருக்காது. குரு பெயர்ச்சிக்குப்பின் பெற்றோரின் கருத்துக்கு மதிப்பளிப்பர். படிப்பிலும், வேலைவாய்ப்பிலும் உங்கள் எண்ணத்தை நிறைவேற்றி வைப்பர். பூர்வ சொத்துக்களில் கிடைக்கும் வருமானம் படிப்படியாக உயரும். உடலில் அவ்வப்போது ஆரோக்கியக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. பழைய கடனைப் பெருமளவில் செலுத்தி மன நிம்மதி அடைவீர்கள். எதிரி ஸ்தானமாகிய ஆறாம் இடத்தை சனி பார்ப்பதால் உங்களுக்கு எதிரான முயற்சி அனைத்தும் தோல்வியடையும். தம்பதியர் குடும்பநலன் சிறக்க ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடப்பர். எதிர்கால முன்னேற்றம் கருதி ஆர்வமுடன் பணிகளை மேற்கொள்வர். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். உறவினர்களின் ஆதரவால் சுபநிகழ்ச்சி நடந்தேறும். நண்பர்கள் உங்களுக்கு உதவுவது, உதவி பெறுவதுமான சூழ்நிலை தொடரும். வாழ்வில் சுக சவுகர்யங்களை அனுபவிக்க வருமானம் இடம் கொடுத்தாலும் எளிய வாழ்க்கை நடைமுறையை பின்பற்றுவீர்கள். தொழில் சார்ந்த வகையில் மூலதனத்தை அதிகப்படுத்தி அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்வீர்கள். வெளிநாடு வேலைவாய்ப்பு விரும்புபவர்களுக்கு கடின முயற்சியால் அனுகூலம்கிடைக்கும்.
தொழிலதிபர்கள்: வங்கி நிதியுதவியுடன் தொழிலில் அபிவிருத்தி பணியை திறம்பட நிறைவேற்றுவர். எதிர்பார்த்த கடனுதவியும் உடனடியாக கிடைக்கும். புதிய தொழிற்கருவிகளை பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவர். புதிய ஒப்பந்தம் கிடைத்து வருமானத்தை அதிகரிப்பர். தொழில் கூட்டமைப்பில் சிலருக்கு கவுரவமான பதவி கிடைக்கும்.
வியாபாரிகள்: வியாபாரத்தில் புதிய உத்திகளைப் புகுத்தி விற்பனையை அதிகரிக்க முயற்சிப்பர். சீரான வளர்ச்சியும், மிதமான லாபமும் கிடைக்கப்பெறுவர். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையைக் கேட்டுப் பெற்று நடைமுறைப்படுத்துவர். சிலர் கடன் பெற்று அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்வர். சகவியாபாரிகளின் ஒத்துழைப்பும் சீராகக் கிடைக்கும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவர். பணியிடத்தில் சாதகமான சூழ்நிலையும் அமையும். திட்டமிட்டுப் பணியாற்றுவதால் பணி இலக்கு எளிதாக நிறைவேறும். பதவி உயர்வு, இடமாற்றம் எதிர்பார்த்தபடி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த கடனுதவி சரியான நேரத்தில் கிடைக்கும். பணிச்சுமை அதிகரித்தாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் திறமையுடன் செயல்பட்டு பணி இலக்கை சிறப்பாக நிறைவேற்றுவர். நிர்வாகத்திடம் நற்பெயரும் சலுகை பயனும் கிடைக்கும். குடும்ப பெண்கள் திட்டமிட்டுச் செயல்பட்டு பணத்தை மிச்சப்படுத்துவர். மிச்சப்படுகிற பணம் எதிர்காலம் கருதி சேமிக்கவும் செய்வர். குழந்தைகளின் எதிர்கால நலன் குறித்த விஷயங்களில் ஆர்வம் காட்டுவர். சுயதொழில் புரியும் பெண்கள் வங்கியில் கடன் பெற்று வளர்ச்சிப்பணியில் ஈடுபடுவர். உற்பத்தி, விற்பனை சிறந்து லாபவிகிதம் அதிகரிக்கும்.
மாணவர்கள்: விரும்பிய கல்வி நிறுவனத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆர்வமுடன் படித்து ஆசிரியர், பெற்றோர் பாராட்டுகிற வகையில் நல்ல தேர்ச்சி பெறுவர். படிப்புக்கான பணவசதி திருப்திகரமாக கிடைக்கும். வேலைவாய்ப்புக்கு முயற்சிப்பவர்களுக்கு தகுதிக்கேற்ப நல்ல சம்பளத்தில் பணி கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: புத்தாண்டில் துவங்கும் புதிய திட்டங்கள் குறையின்றி நிறைவேறும். ஆதரவாளர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும். அரசியல்ரீதியான வெளியூர், வெளிநாட்டுப்பயணம் அடிக்கடி சென்று வருவர்.
விவசாயிகள்: பயிர் வளர்ப்பில் இயற்கை முறைகளைப் பின்பற்றி மகசூலை அதிகப்படுத்துவர். செலவுக்குத் தேவையான பணம் எளிதாக கிடைக்கும். விளைபொருட்களுக்கு சந்தையில் நல்லவிலை கிடைக்கும்.
பரிகாரம்: நடராஜரை வழிபடுவதால் ஆண்டு முழுவதும் நன்மை பன்மடங்கு உயரும்.
பரிகாரப் பாடல்:
ஆடியபாதம் மன்றாடிய பாதம்
ஆடிய பாதம் நின்றாடிய பாதம்
பாடிய வேதங்கள் தேடிய பாதம்
பத்திசெய் பக்தருக்கு தித்திக்கும் பாதம்
நாடிய மாதவர் தேடிய பாதம்
நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம்
ஜனவரி: சனி,ராகு, குரு முதலிய ஆண்டு கிரகங்கள் மத்திமபலனை தருவார்கள். மூன்றாமிட கேதுவால் நன்மை கூடும். வாகனப்பயணத்தில் கவனம் தேவைப்படும். தொழிலில் இருந்து வந்த மந்தநிலை விலகும். உடல்நிலையில் அக்கறை தேவை.
பிப்ரவரி: சுபநிகழ்ச்சி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுவீர்கள். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். நட்புவிஷயத்தில் எச்சரிக்கை அவசியம். பணிச்சுமை அதிகரிப்பதால் சோர்வுக்கு ஆளாக நேரிடும். சகோதரர்களின் உதவி கிடைக்கும்.
மார்ச்: தொழில் விஷயமாக அடிக்கடி வெளியூர்ப்பயணம் செல்ல நேரிடும். அன்றாட கடமைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். பெற்றோருக்காக மருத்துவச் செலவு செய்வீர்கள். குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்டு பெருமை கொள்வீர்கள்.
ஏப்ரல்: தொழிலில் பிரச்னை ஏற்பட்டு விலகும். தம்பதியர் விட்டுக்கொடுத்து நடப்பது அவசியம். பணப்பற்றாக்குறையால் கடன் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களிடம் இணக்கம் அதிகரிக்கும். மனதில் தைரியம் சிறிதும் குறையாது.
மே: கேதுவால் சில நன்மைகளைப் பெறுவீர்கள். புதன், சுக்கிரன் இருவராலும் அனுகூலம் ஏற்படும். இருந்தாலும் சனியின் சோதனையை எதிர்கொள்ளும் கட்டாயம் உண்டு. எதிரிகளால் தொல்லைக்கு உள்ளாவீர்கள்.
ஜூன்: குருவின் ஐந்தாமிட சஞ்சாரத்தால் நல்ல நேரம் வந்து விட்டது. தொழிலில் அபார வளர்ச்சி ஏற்படும். குடும்பப் பிரச்னை நல்லவிதமாகத் தீர்ந்து விடும். பொருளாதாரம் நாளுக்கு நாள் அதிகரிக்கும். பதவி, ஊதிய உயர்வுக்கும் வாய்ப்புண்டாகும்.
ஜூலை: அரசாங்க வகையில் பல நன்மைகளைப் பெறுவீர்கள். புதிதாக வீடு, வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீகச் சொத்தால் வருமானம் கிடைக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். பிள்ளைகள் கல்வி வளர்ச்சி காண்பர்.
ஆகஸ்ட்: குடும்பத்தில் திருமணம் நடத்தி மகிழ்வீர்கள். தொழில் விஷயமாக வெளியூர், வெளிநாடு சென்று ஆதாயத்துடன் திரும்புவீர்கள். புதன் அருளால் வியாபாரம் வளர்ந்தோங்கும். விவசாயிகள் அமோக லாபம் காண்பர்.
செப்டம்பர்: வீட்டில் தெய்வவழிபாடு சிறந்தோங்கும். உங்கள் வளர்ச்சியைக் கண்டு எதிரிகள் பயந்தோடுவர். மனதில் தைரியம் அதிகரிக்கும். நல்லவர்களின் சேர்க்கை உண்டாகும். சகோதரர்களின்ஆதரவு கிடைக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும்.
அக்டோபர்: குரு வக்ரம் பெறுவதால் நன்மையின் அளவு குறையும். பெற்றோர் உடல்நலனில் அக்கறை தேவை. கடின அலைச்சலால் உடல்நலம் பாதிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் சீராக நிறைவேறும்.
நவம்பர்: எதிரிகளின் மறைமுக சூழ்ச்சிக்கு ஆளாக நேரிடும். கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்சரவு ஏற்படும். குழந்தைகள் வகையில் மருத்துவச் செலவு கூடும். தொழிலில் மிதமான லாபம் கிடைக்கும். சிக்கனத்தைக் கடைபிடிப்பீர்கள்.
டிசம்பர்: சனியுடன் ராகு சேர்க்கை, குருவக்ரம்,செவ்வாயின் சஞ்சாரம் ஆகியவற்றால் மனதில் அமைதி குறையும். உறவினர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். தொழில் மந்தநிலை உருவாகும். தெய்வ வழிபாட்டின் மூலம் மன அமைதி காண்பீர்கள்.