பதிவு செய்த நாள்
28
டிச
2012
04:12
அடுத்தவர் உதவியை அளவுடன் எதிர்பார்க்கும் மகர ராசி அன்பர்களே!
புத்தாண்டில் உங்கள் ராசிக்கு குருபகவான் மட்டுமே நல்ல பலன்களை வழங்குகின்ற வகையில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ளார். கேது நான்காம் இடத்திலும், சனி, ராகு ராசிக்கு பத்தாம் இடத்திலும் கேந்திர ஸ்தானங்களில் சமசப்தம பார்வையில் உள்ளனர். உங்கள் செயல்கள் குருவருளால் பரிபூரணமாக நிறைவேறும்.சிலரது நடவடிக்கை உங்களுக்கு எரிச்சல் தருவதாக அமையும் என்பதால் கடின வார்த்தை பேசும் நிலை உருவாகும். அவர்களை விட்டு விலகியிருங்கள். வருட முற்பகுதியில் பணவரவு உயரும். குடும்பத்தில் சுபமங்கல நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். நன்னடத்தை குறைவான சிலர், உங்களை தனது நண்பர் என பிறரிடம் சொல்லி ஆதாயம் பெற முயற்சிப்பர். அவ்வாறான நபர்களை இனம் கண்டறிந்து ஒதுங்கியிருப்பது நன்மை தரும்.புத்திரர்கள் நல்ல பழக்க வழக்கங்களைப் பின்பற்றி படிப்பில் மிகுந்த அக்கறை கொள்வர். உயர்ந்த தேர்ச்சி கிடைக்கும். வளாகத் தேர்வுகளில் கவுரவமான வேலைவாய்ப்பு பெறுவர். பூர்வ சொத்தில் உபரி வருமானம் கிடைக்கும்.மே 28ல், குரு பெயர்ச்சியாகி மிதுனத்திற்கு வருகிறார். இதனால் உடல்நலத்தில் கூடுதல் அக்கறையுடன் இருக்க வேண்டும். பணியில் பரபரப்பு இல்லாத அளவிற்கு திட்டமிட்டு செயல்பட வேண்டும். இருப்பினும் மே மாதத்திற்குப் பின் குருவின் பார்வை காரணமாக, தகுந்த ஓரளவு ஆரோக்கியம் மேம்படும். மனதிற்கு கவலை தரும் விதத்திலான உதிரிக் கடன்களை அக்கறையுடன் அடைத்து நிம்மதி பெறுவீர்கள். தம்பதியர் ஒற்றுமையுடன் செயல்பட்டு குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவர். உறவினர் பார்வையில் உங்கள் குடும்பம் பற்றிய மதிப்பீடு உயரும். நண்பர்கள் சச்சரவுக்கு இடம் தராமல் அன்புடன் நடந்து கொள்வர். தந்தைவழி உறவினர்களுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற சந்தர்ப்பம் கிடைக்கும். தொழில் ஸ்தானத்தில் சனி, ராகுவின் அமர்வு உள்ளது அவ்வளவு நல்லதல்ல. இதனால் அதிக அளவில் நியாயமாக நடந்தால் தான் நிர்வாகத்தின் பாராட்டுதலைப் பெற முடியும். அது மட்டுமல்ல! சட்ட சிக்கல்களில் சிக்காமலும் தப்பிக்கலாம். இருப்பினும், மே மாதத்திற்கு மேல் குருவின் ஐந்தாம் பார்வை காரணமாக சிரமங்கள் குறையும். மூத்த சகோதரர்கள் ஆசிரியரைப் போல செயல்பட்டு உங்களை மாணவராகக் கருதி சில நல்ல விஷயங்களை சொல்லித்தருவார். அதன்வழி நடந்து நற்பலன் பெறுவீர்கள். வெளிநாடு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு பல்வேறு முயற்சிக்குப்பின் நன்மை கிடைக்கும். இளம் வயதினருக்கு வருட முற்பகுதியில் திருமண முயற்சி இனிதே நிறைவேறும்.
தொழிலதிபர்கள்: பொருள் உற்பத்தி, நிர்வாக நடைமுறையில் குறை வரலாம். புதிய உத்திகளை நடைமுறைப்படுத்தி குறை இல்லாமல், பார்த்துக்கொள்வது நல்லது. இதனால், நிறுவனத்தை பற்றிய மதிப்பீடு உயர்ந்து புதிய ஒப்பந்தங்களைப் பெற்றுத்தரும். நிர்வாக நடைமுறையில் சிக்கனமாக இருந்தாலும், தவிர்க்க இயலாத வகையில் புதிய செலவுகளும் உருவாகும். லாபம் ஓரளவுக்கே இருக்கும்.
வியாபாரிகள்: வாடிக்கையாளர்களிடம் இதமான அணுகுமுறையை பின்பற்றுவதால் விற்பனை இலக்கை நிறைவேற்ற இயலும். போட்டியை சமாளிப்பதில சில நடைமுறை மாற்றங்களைப் பின்பற்ற வேண்டி வரும். லாபம் சுமாராக இருக்கும். குடும்பத் தேவைகளை நிறைவேற்ற கொஞ்சம் கடன் பெறுவீர்கள். சக வியாபாரிகளுக்கு சரக்கு கொள்முதல் இடங்களில் பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். சுபநிகழ்ச்சிகளை அளவான பணச்செலவில் நடத்துவது நல்லது.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், பணிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படும். புதிதாக வேலைப்பளுவும் உருவாகி நிர்ப்பந்தம் தரும் என்பதால், குழப்பமும் உடல் சோர்வும் ஏற்படும். சக பணியாளர்களிடம் கருத்து வேற்றுமை வராத அளவிற்கு செயல்படுவதால் வீண் சிரமம் தவிர்க்கலாம்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் வேலையில் கவனமாகச் செயல்படுவதால் மட்டுமே வேலைகளை குறித்த காலத்தில் பூர்த்தி செய்ய இயலும். சலுகைகள் ஓரளவு கிடைக்கும். குடும்பத்தின் முக்கிய தேவைக்காக நிர்வாகத்திடம் கடன் பெறுவீர்கள். குடும்பப் பெண்கள் கணவரின் வருமானத்திற்கேற்ப செலவுகளில் சிக்கனம் பின்பற்றுவது நல்லது. நகைகளை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, மிதமான லாபம் காண்பர். கடனுக்கு கிடைக்கிறது என்று பயன்தராத தொழில்நுட்ப உபகரணங்களை வாங்க வேண்டாம்.
மாணவர்கள்: சக மாணவர்களிடம் படிப்பு, பொது விஷயங்களில் அளவுடன் பேசுவது நல்லது. விளையாட்டில் தகுந்த பாதுகாப்பு நடைமுறை பின்பற்ற வேண்டும்.
அரசியல்வாதிகள்: எதிர்மனப்பாங்குடன் உள்ள சிலர் உங்களின் பணி நிறைவேறுவதற்கு உதவுவது போல பாசாங்கு செய்வர். அவர்களிடம் விழிப்புடன் செயல்படுவதால் மட்டுமே நற்பெயரைக் காத்துக் கொள்ள முடியும்.
விவசாயிகள்: விவசாயிகள் ஆர்வமுடன் பணியில் ஈடுபடுவர். புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். விளைபொருட்களை இருப்பு வைக்காமல் ஓரளவு லாபத்திற்காவது விற்று விடுவது நஷ்டத்தைத் தவிர்க்கும்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் மனதில் தைரியம், செயலில் வெற்றி உண்டாகும்.
பரிகாரப் பாடல்:
அஞ்சிலே ஒன்றுபெற்றான்
அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக
ஆரியற்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் எம்மை அளித்துக்காப்பான்.
ஜனவரி: ஜென்மத்தில் செவ்வாய், சூரியன் இருப்பதால் உடல்நலக்குறைவு உண்டாகும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். பூமி சம்பந்தமான பிரச்னை ஏற்படும். மனதில் தேவையற்ற பயம், கவலை மேலோங்கும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.
பிப்ரவரி: குரு, சனியின் சஞ்சாரத்தால் விசேஷ நன்மை உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமணம், குழந்தைப்பேறு போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் பன்மடங்கு உயரும்.
மார்ச்: ஆண்டு கிரகங்களோடு மாத கிரகங்களும் சிறப்பாக அமைந்துள்ளனர். சமூகத்தில் அந்தஸ்து மிக்கவராகத் திகழ்வீர்கள். உறவினர்களின் ஆதரவைக் கண்டு மகிழ்வீர்கள். பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் வளர்ச்சி காண்பர்.
ஏப்ரல்: புதிதாக வீடு, வாகனம் வாங்கும் யோகமுண்டு. நீதிமன்ற வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்று வருவீர்கள். தாய்வழியில் சொத்து கிடைக்கும். சகோதரர்களின் ஒத்துழைப்பும், உதவியும் கிடைக்கும்.
மே: குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்திட அனுகூலம் உண்டு. புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. தாய்வழி உறவினர்களிடம் நெருக்கம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகைப்பயன் கிடைக்கும். தீர்த்தயாத்திரை சென்று வருவீர்கள்.
ஜூன்: குரு ஆறாமிடத்திற்குச் செல்வது சிறப்பல்ல. எதிரிகளால் தொல்லை ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பயணத்தில் மிதவேகம் அவசியம். புத்திரர் வகையில் மருத்துவச் செலவு வரலாம். பொருட்களை விழிப்புடன் பாதுகாப்பது அவசியம்.
ஜூலை: தொழிலில் பின்னடைவு உண்டாகும். இருந்தாலும் சாதுர்யமாக நிலைமையைச் சமாளிப்பீர்கள். நிழல்கிரகங்களான ராகு, கேதுவால் மனதில் குழப்பம் அதிகரிக்கும். நண்பர்களின் செயல்பாடு வருத்தத்தை ஏற்படுத்தும்.
ஆகஸ்ட்: பணிச்சுமை அதிகரிக்கும். பணப்பற்றாக்குறையால் கடன் வாங்க நேரிடும். சகோதரர்கள் உங்கள் மீது வெறுப்பு கொள்வர். நீதி,நியாயத்தை கடைபிடிப்பது நன்மைக்கு வழிவகுக்கும். உறவினர்களின் உதவி அவ்வப்போது கிடைக்கும்.
செப்டம்பர்: உடல்நலன் அதிருப்தி அளித்தாலும் சமாளித்து விடுவீர்கள். தம்பதிக்குள் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புண்டு. உழைப்பில் உறுதி காட்டுவீர்கள். குருவின் பார்வை சனிக்கு உண்டாவதால் சில நன்மைகளைப் பெறுவீர்கள்.
அக்டோபர்: தொழிலில் மிதமான லாபம் கிடைக்கும். மறைமுகப்போட்டியைச் சந்திப்பீர்கள். ஆரோக்கியம் மேம்படும். பழைய கடன் ஓரளவு அடைபடும். பிள்ளைகளின் செயல்பாடு மனதிற்கு நிம்மதி அளிக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.
நவம்பர்: குரு வக்ரமடைவது நன்மையை வாரி வழங்கும். பெற்றோர் உடல்நலனில் அக்கறை தேவை. பெரிய மனிதர்களின் ஆதரவால் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். புதிய பங்குதாரர்கள் வலிய வந்து சேருவர்.
டிசம்பர்: பூர்வீகச் சொத்து மூலம் ஆதாயம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு சாதகமான காலகட்டம். தொலைதூரப்பயணம் மேற்கொள்வீர்கள். அரசாங்க வகையில் அனுகூலமான பலன் கிடைக்கும். மனதில் நிம்மதி நிலைத்திருக்கும்.