பரமக்குடி, ரெகுநாதபுரத்தில் மகர சங்கராந்தி விழாவில் ஜோதி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜன 2026 12:01
பரமக்குடி: பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மகர சங்கராந்தி விழாவையொட்டி சரண கோஷம் முழங்க மகரஜோதி தரிசனம் நடந்தது. கோயிலில் தினமும் அபிஷேக ஆராதனைகள் மற்றும் இரவு ஹரிவராசனம் பாடப்பட்டு வருகிறது. இங்கு ஆரியங்காவு கோயில் போன்று புஷ்கலா தேவி, தர்மசாஸ்தா திருக்கல்யாணம் ஆண்டு தோறும் நடக்கிறது.
இந்நிலையில் நேற்று மகர சங்கராந்தி விழாவையொட்டி அனைத்து வகையான அபிஷேகங்களும் நடந்தன. பின்னர் யோக நிலையில் இருக்கும் மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு துாப தீப ஆராதனைகள் நடந்தது. மாலை 6:30 மணிக்கு மகர ஜோதி தரிசன விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சரண கோஷம் முழங்க வழிபாடு செய்தனர். பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
* ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பதை போன்று இங்கு அனைத்து விதமான பூஜைகளும் விழாக்களும் நடந்து வருகிறது. நேற்று மகர ஜோதியை முன்னிட்டு அதிகாலை 4:30 மணிக்கு கோயில் மண்டபத்தில் கணபதி ஹோமம் நடந்தது. அதிகாலை 5:30 மணிக்கு அஷ்டாபி ஷேகம் மற்றும் பல்வேறு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. வல்லபை ஐயப்பன் சன்னிதானம் முன்புறம் நேற்று மாலை 6:00 முதல் 6:40 மணிக்குள் சிறப்பு பூஜை மற்றும் பக்தர்கள் அனைவரும் கண்டு தரிசித்து செல்லும் வகையில் மகரஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
பூஜைகளை தலைமை குருசாமி மோகன் செய் திருந்தார். ரெகுநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் மகரஜோதி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.