திருவொற்றியூர்: சென்னை, திருவொற்றியூர் – தேரடி, சன்னதி தெருவில், 1,000 ஆண்டுகள் பழமையான அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. அகத்திய முனிவர் வடதிசை நோக்கி பிரதிஷ்டை செய்த குபேர லிங்கமே, அகத்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது.
இக்கோவிலின் புனரமைப்பு பணிகள் முடிந்து, இம்மாதம், 2ம் தேதி முதல், விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமத்துடன், கும்பாபிஷேக நிகழ்வுகள் துவங்கின. நேற்று காலை, மஹா பூர்ணாஹூதி முடிவுற்று, கடம் புறப்பாடாகின. பின், அகத்தீஸ்வரர் கோவில், ஐந்து நிலை ராஜகோபுர கலசங்களில், புனிதநீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், ‘ஓம் நமச்சிவாயா’ என, விண்ணதிர முழங்கினர். அகத்தீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா தீபாரதனை நடந்தது. விழாவில், கோவில் உதவி கமிஷனர் நற்சோணை, திருவொற்றியூர் தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு உட்பட பலர் பங்கேற்றனர். மாலையில், திருக்கல்யாண உற்சவமும், இரவு பஞ்சமூர்த்தி புறப்பாடு, மாடவீதி உற்சவம் நடந்தது.