சபரிமலை: சபரிமலையில் மகரஜோதி மற்றும் மகரவிளக்கை கண்டு பக்தர்கள் பரசவத்துடன் தரிசனம் செய்து, சாமி கும்பிட்டு மலை இறங்கினர். கடந்த டிச.,30-ம் தேதி தொடங்கிய மகரவிளக்கு கால பூஜையின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மகரவிளக்கு பெருவிழா நடைபெற்றது. நேற்று காலை மூன்று மணிக்கு தொடங்கிய நெய்யபிஷேகம் காலை ஆறு மணிக்கு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மகரசங்கரம பூஜைக்கான சடங்குகள் நடைபெற்றது. சரியாக 6.54 மணிக்கு திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்பட்ட நெய் பகவானின் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து உஷபூஜைக்கு பின்னர் நெய்யபிஷேகம் தொடங்கியது. நேற்று மதியம் உச்சபூஜைக்கு பின்னர் அடைக்கப்பட்ட நடை மாலை ஐந்து மணிக்கு திறந்தது. நடை திறந்ததும் திருவாபரணத்தை வரவேற்க செல்லும் தேவசம்போர்டு அதிகாரிகள் ஸ்ரீகோயில் முன்புறம் வந்தனர். அவர்களுக்கு தந்திரி கண்டரரு ராஜீரரு மாலை அணிவித்து வழி அனுப்பி வைத்தார். பந்தளத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி புறப்பட்ட திருவாபரணபவனி நேற்று மாலை 5.30 மணிக்கு சரங்குத்தி வந்தடைந்தது. தேவசம்போர்டு அதிகாரிகள் சென்று முறைப்படியாக வரவேற்பு கொடுத்த பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பவனி 6.25 மணி வாக்கில் சன்னிதானம் வந்தது. பக்தர்கள் சரணகோஷம் முழங்க 18-ம் படி வழியாக ஒரு திருவாபரண பெட்டி வந்தது. இரண்டு பெட்டகங்கள் மாளிகைப்புறம் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீகோயில் முன்பு திருவாபரணபெட்டியை தந்திரியும், மேல்சாந்தியும் பெற்று நடை அடைத்தனர்.
தொடர்ந்து திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு நடை திறந்து தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சன்னிதானத்தில் குழுமியிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் கண்கள் பொன்னம்பலமேட்டை நோக்கியிருந்தது. மாலை 6.35 மணிக்கு தீபாராதனை முடிந்த 6.38 மணியக்கு மகர நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசிக்க தொடங்கியது. இதை கண்ட பக்தர்கள் சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டனர். பின்னர் மூன்று முறை மகரஜோதி காட்சி தந்தது. ஜோதியை கண்டு தரிசித்த ஆனந்தத்தில் பக்தர்கள் மலைஇறங்கினர். இரண்டு ஆண்டுக்கு முன் புல்மேட்டில் மகரவிளக்குக்கு பின்னர் நடைபெற்ற விபத்தில் 102 பேர் இறந்ததால் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது. விபத்துக்கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு டாக்டர்கள் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.