திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நேற்று காலை 10:00 மணி முதல் 12:00 மணிக்குள் பெருமாள் கோயில் முன்புறமுள்ள கொடிமரத்தில் கொடி பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பின்னர் தர்ப்பைப்புற்கள் மற்றும் பட்டு வஸ்திரங்களால் பிணைக்கப்பட்டது. கொடி பட்டம் ஏற்றியவுடன் சிறப்பு தீபாராதனை நடந்தது. சாற்று முறை கோஷ்டி பாராயணம் நடந்தது கோயில் பட்டாச்சாரியார்களால் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் பாடப்பட்டது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. சிம்ம வாகனம், அனுமார் வாகனம், உபய கருட சேவை, புன்னை வாகனம், சேஷ வாகனம், ஹம்ச வாகனம் உள்ளிட்டவைகள் நடக்கிறது. வருகிற மார்ச் 29 அன்று திருக்கல்யாண உற்ஸவமும், ஏப்., 4 (பங்குனி உத்தரம் அன்று) காலை 9:00 மணிக்கு மேல் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க பெரிய தேரோட்டம் நடக்கிறது. ஏப்., 6 அன்று உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.