பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், இந்தாண்டு பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த, 23ம் தேதி, துவங்கியது. வரும், 29ம் தேதி, தேரோட்டம் நடக்க உள்ளது. இந்நிலையில், தேரை ஆய்வு செய்த பொதுப்பணித்துறையினர் தேரின் உறுதித்தன்மையில் சந்தேகம் இருப்பதாக, நிலைத்தன்மை சான்றளிக்கவில்லை. இதனால், சப்பரத்தில் சுவாமி திருவீதியுலா நடத்த அறநிலையத்துறையினர் திட்டமிட்டனர். இதற்கு, ஹிந்து அமைப்பினர் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், நேற்றுமுன்தினம் பொதுப்பணித்துறையினர் மீண்டும் ஆய்வு செய்தனர். தேரில் உள்ள குறைகளை கூறி, அதை நிவர்த்தி செய்யுங்கள் அதன்பின், மீண்டும் ஆய்வு செய்து முடிவு தெரிவிப்பதாக கூறினர். இதனையடுத்து, பொதுப்பணித்துறையினர் கூறிய குறைகளை நிவர்த்தி செய்யும் பணி நடந்தது. நேற்று இரவு, பொதுப்பணித்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) செயற்பொறியாளர் செல்வராஜ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். மீண்டும், நாளை (இன்று) காலை ஆய்வு செய்து இறுதி முடிவு தெரிவிப்பதாக கூறினர். அப்போது, அங்கிருந்த ஹிந்து அமைப்பினர், பொதுப்பணித்துறை அதிகாரியின் வாகனத்தை முற்றுகையிட்டு, தேரோட்டம் நிச்சயம் நடக்க வேண்டும். தேரின் உறுதி தன்மையறிய, நாளை (இன்று) சோதனை ஓட்டம் நடத்த வேண்டும். அதில், தேர் உறுதியாக உள்ளதா என்பது தெரியும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, நாளை (இன்று) பகல், 12:00 மணிக்கு சோதனை ஓட்டம் நடத்தப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், சிறிது நேரம் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.