ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா மவுலீதுடன் துவக்கம் ஏப்.28ல் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2026 09:04
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராகிம் பாதுஷா நாயகம் தர்காவில் 852ம் ஆண்டு உரூஸ் என்னும் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா மே 10ல் நடக்கும் நிலையில் மவுலீது ஓதுவதுடன் துவங்கியது.
நேற்று மாலை 6:30 மணி முதல் சிறப்பு துவா ஓதப்பட்டது. பின் உலக நன்மைக்கான மவுலீது (புகழ் மாலை) துவங்கியது. மாவட்ட அரசு காஜி சலாஹுதீன் ஆலீம் முன்னிலையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மவுலீது முதல் நாளை முன்னிட்டு புனித மக்பராவில் சந்தனம் பூசப்பட்டு மல்லிகை சரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரவு 11:30 மணி வரை தொடர்ந்து ஓதப்பட்டது.
பேரிச்சம்பழம், பிஸ்கட், பழ வகைகள் தட்டுகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டது. பிரார்த்தனையில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான யாத்ரீகர்கள் ஏர்வாடி தர்காவிற்கு வருகின்றனர்.
ஏப்., 28ல் சந்தனக்கூடு விழா கொடியேற்றம் நடக்கிறது.
மே 10 மாலை முதல் சந்தனக்கூடு திருவிழாவிற்கான நிகழ்வுகள் துவங்கி மறுநாள் அதிகாலை புனித மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது.
ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் அகமது இப்ராகிம், துணைத் தலைவர் முஹம்மது சுல்தான், செயலாளர் ஜாகிர் உசேன் மற்றும் தர்கா நிர்வாக சபை உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.