சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாநில போலீஸ் ஏ.டி.ஜி.பி. க்கு சிறப்பு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா வனப்பகுதியில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலைல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சன்னிதானம் பகுதியில் ஒரு ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்துள்ளது கொடி மரத்திற்கு மிகவும் அருகில் பறந்து செல்வது போன்ற படங்கள் வெளியானது. இது சபரிமலை பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள குளறுபடியா? என்ற கேள்வி எழுந்த நிலையில் இது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேரள உயர் நீதிமன்றம் நியமித்துள்ள சிறப்பு ஆணையர் ஜெயகிருஷ்ணன் க சபரிமலை பாதுகாப்பு பொறுப்பாளரான ஏ.டி.ஜி.பி. ஸ்ரீஜித்துக்கு உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையில் கடலோர காவல் படை தரப்பில் இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது அதில் கூறியுள்ளதாவது: சி.ஜி. 821 ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. பொதுவாக கொச்சிக்கு தெற்கே 60 முதல் 80 மைல் தொலைவில் இது பறக்கும். நேற்று ஆறாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது வானிலைமோசமாகி, வானம் மேகமூட்டமாக மாறியதால் ஹெலிகாப்டர் திசைமாறி சபரிமலை பகுதிக்கு வந்தது. கோவிலின் மீது பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் பின்னர் வானிலை சீரானதும் கொச்சிக்கு திரும்பியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.