திருச்சூர் பூரம் திருவிழா கோலாகலம்: 30 யானைகள் அணிவகுத்து குடை மாற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2026 10:04
பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் பூரம் திருவிழாவின் குடை மாற்றம் நிகழ்ச்சி கோலாகலமாக நேற்று நடந்தது.
கேரளா மாநிலம் திருச்சூரில் நடக்கும் புகழ்பெற்ற வடக்குநாதர் கோவில் பூரம் திருவிழா உலகப் புகழ் பெற்றது. இந்தாண்டுக்கான விழா முறைப்படி நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்றைய நிகழ்ச்சியில் வடக்கு நாதரான சிவபெருமானை, நெய்தலைக்காவு பகவதி அம்மன் மற்றும் உப கோவில்களின் உற்வர்கள் யானை மீது எழுந்தருளி வணங்கினர். பின், கோவில் கோபுர நடை வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின், வடக்குநாதர் சன்னிதியில், பஞ்சவாத்திய இசைக்கேற்ப யானைகளின் அணிவகுப்பு நடந்தது. இதைத் தொடர்ந்து, செண்டை மேளம் முழங்க நடந்த நிகழ்ச்சியில் 15 யானைகள் அணிவகுப்புடன் எழுந்தருளிய பரமேக்காவு பகவதி அம்மன், வடக்கு நாதர் சன்னிதிக்கு வரும் வைபவம் நடந்தது. இலஞ்சித்தறைமேளம் எனப்படும் செண்டை மேள நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர்.
மூன்று மணி நேரத்துக்கும் மே லாக இடைவிடாது நடந்த இசை நிகழ்ச்சி, திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. மாலை, 4:30 மணிக்கு, திருவம்பாடி கோவிலுக்கு சொந்தமான, 15 யானைகள் ராஜ அலங்காரத்துடன் வடக்குநாதர் கோவில் முன் வந்தன. அந்த கோவிலின் தெற்கு கோபுர நடை வழியாக, பரமேக்காவு பகவதி அம்மன் கோ வில் யானைகள் வந்தன. இதையடுத்து, பூரம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான குடை மாற்றம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. இரு கோவில்களின் 30 யானைகள் மீது அமர்ந்திருந் தவர்கள், முத்துமணி மாலையுடன் கூடிய வண்ணமயமான குடையை செண்டை மேள இசைக்கேற்றபடி மாற்றினர். இருதரப்பினர் போட்டி போட்டு நடத்திய குடை மாற்றம் நிகழ்ச்சியை கூடியிருந்தவர்கள் உற்சாக கைதட்டலுடன் ரசித்து மகிழ்ந்தனர்.