பதிவு செய்த நாள்
19
ஜன
2013
10:01
சேலம்: சேலம், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் விழாவில், நேற்று ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.சேலம், குகையில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், தொட்டப்ப விழா, கடந்த, 14ம் தேதி, சக்தி அழைப்புடன் துவங்கியது. அம்மனுக்கு, 15ம் தேதி சாமுண்டி அழைப்பு, 16ம் தேதி திருமஞ்சனம் நடந்தது. தினமும் காலை, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. நேற்று மாலை, 6.30 மணிக்கு, வீரகுமாரர்கள், வீரமுஷ்டி அலகு சேவையுடன் நந்தவனத்தில் இருந்து கத்தி போட்டபடியே, காளியம்மன் கோவில் பூமிதி மைதானத்துக்கு வந்தனர்.ஆண்கள் மஞ்சள் வேட்டி, மஞ்சள் துண்டு அணிந்து அம்மனை கும்பிட்டபடியே, குண்டம் இறங்கினர். பெண்கள், மஞ்சள் சேலை அணிந்து, அம்மனை கும்பிட்டு குண்டம் இறங்கினர். சிறுவர், சிறுமியர், பெண்கள் மற்றும் ஆண்கள் என ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.