கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழாவின் மூன்றாம் நாளில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது.
கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், வீதியுலா நடந்து வருகிறது. மூன்றாம் நாளான நேற்று காலை பல்லக்குகளில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. இரவு சன்னதி வீதியில் உள்ள பழைய வண்டிப்பாளையம் செங்குந்த மரபினர்களின் 3ம் திருவிழா கட்டளை டிரஸ்ட் மண்டபத்தில் மண்டகப்படி பூஜை நடந்தது. தொடர்ந்து, பூத வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை செங்குந்த மரபினர்கள் செய்திருந்தனர்.
இன்று (25ம் தேதி) இரவு 10:00 மணிக்கு கற்பக விருட்சம், நாக வாகனங்கள் பஞ்சமூர்த்திகள் வீதியுலா, நாளை 26ம் தேதி காலை 5:30 மணிக்கு அதிகார நந்தி கோபுர தரிசனம், இரவு 10:00 மணிக்கு மேல் தெருவடைச்சான் உற்சவம், வரும் 30ம் தேதி காலை 7:30 மணிக்கு தேரோட்டம், 2ம் தேதி காலை திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி நடக்கிறது.