காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோத்சவம் நடைபெறும்போது, திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் இருந்து, வரதராஜ பெருமாளுக்கும், பெருந்தேவி தாயாருக்கும் பட்டு வஸ்திரங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் சீர்வரிசையாக கொண்டு வரப்பட்டு சமர்ப்பிப்பது வழக்கம். அதன்படி, ஒன்பதாம் நாள் உத்சவமான நேற்று, திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் இருந்து, வரதராஜ பெருமாளுக்கு பட்டு வஸ்திரமும், பெருந்தேவி தாயாருக்கு பட்டுச் சேலையும், பல வகையான பூக்கள், பழ வகைகள், பூஜை பொருட்கள், மலர் மாலைகள் உள்ளிட்டவற்றை திருப்பதி கோவில் அதிகாரிகள் கொண்டு வந்து, வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகத்தினரிடம் சமர்ப்பித்தனர்.