திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரத்தை உறுதிப்படுத்த மத்திய அரசுடன் ஒப்பந்தம்!
பதிவு செய்த நாள்
16
ஜூன் 2026 12:06
திருப்பதி: உலக புகழ்பெற்ற திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்ட நெய்யில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து, அதன் தரம், பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு நிறுவனமான, சி.எப்.டி.ஆர்.ஐ., எனப்படும், மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் திருமலை திருப்பதி தேவஸ்தானம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமை யில் தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சியில், 2019 - 24 வரையிலான காலத்தில், பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில், 70 லட்சம் கிலோ கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. விசாரணை கமிஷன்: நாடு முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சி.பி.ஐ., விசாரிக்கிறது. அதே போல, ஆந்திர அரசு சார்பில் தனிநபர் விசாரணை கமிஷனும் விசாரிக்கிறது. சமீபத்தில் இறுதி குற்றப் பத்திரிகையை சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ., தாக்கல் செய்தது. அதில், விலங்கு கொழுப்பு கலக்கப்படவில்லை என்றும், தரமற்ற நெய் பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், லட்டு பிரசாதத்தின் தரம், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும், இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு குழுமத்தின் கீழ் இயங்கும், மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்துடன், திருமலை திருப்பதி தேவஸ்தானம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், தேவஸ்தானம் தயாரிக்கும் பிரசாதத்தின் பாரம்பரிய சுவை மற்றும் புனிதத்தன்மை மாறாமல், அதன் தரம் மற்றும் ஆயுட்காலத்தை நீட்டிக்க விஞ்ஞானிகள் தொழில்நுட்ப வழிகாட்டு தல்களை வழங்குவர். இந்த ஒப்பந்தத்தின் கீழ், லட்டு தயாரிப்பு மற்றும் பேக்கேஜிங் முறைகளை முழுமையாக நவீனப்படுத் தவும், ஊழியர்களுக்கு முறையான பயிற்சியும் அளிக்கப்படும். மேலும், பிரசாதத்திற்கான மூலப்பொருட்களை கொள்முதல் செய்வது முதல் தயாரிப்பு வரை, அனைத்து நிலைகளிலும் பின்பற்ற வேண்டிய கடும் தரக்கட்டுப்பாடு விதிகள் மற்றும் கண்காணிப்பு பணிகளை, மத்திய அரசு நிறுவனத்துடன் இணைந்து தேவஸ்தானம் மேற்கொள்ளும். லட்டு பிரசாதத்தின் பாரம்பரிய சுவை, மணம் மற்றும் தரம் மாறாமல் இருக்க, பிரசாதங்கள் தயாரிக்கும் மடப்பள்ளி மற்றும் சேமிப்புக் கிடங்குகளை நவீனமயமாக்க இந்நிறுவனம் ஆலோசனை வழங்கும். ரசாயன அல்லது பிற கலப்படங்களை தடுக்க, நவீன அறிவியல்பூர்வ தொழில்நுட்ப வழிமுறைகள் மற்றும் செயல்முறைகள் பரிந்துரைக்கப்படும். இது தவிர, திருப்பதி தேவஸ்தானத்தின் உணவு பகுப்பாய்வாளர்கள் மற்றும் சமையல் பணியாளர்களுக்கு, மேம்பட்ட பகுப்பாய்வு நுட்பங்கள் குறித்து அந்நிறுவனத்தின் விஞ்ஞானிகள் பயிற்சி அளிப்பர். கள ஆய்வு: குறிப்பாக, நெய்யின் துாய்மை மற்றும் அதன் நறுமணத்தை துல்லியமாக சோதிப்பதற்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். இந்த புதிய தரக்கட்டுப்பாட்டு விதிகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய, அந்நிறுவனத்தின் விஞ்ஞானிகள் திருமலைக்கு தொடர்ந்து நேரடி கள ஆய்வு மேற்கொள்வர். இந்த ஒப்பந்தத்தின் மூலம், பக்தர்களின் நம்பிக்கையும், திருப்பதி லட்டு பிரசாதத்தின் புனிதத்தன்மையும் முழுமையாக பாதுகாக்கப் படும் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
|