அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு; சி.பி.ஐ., விசாரணை கோரி மனு
பதிவு செய்த நாள்
16
ஜூன் 2026 10:06
அயோத்தி ராமர் கோவிலுக்கு நன்கொடை வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில், ராமர் கோவில் கட்டப்பட்டு, 2024ல் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நாடு முழுதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால ராமரை தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலை நிர்வகிக்கும் ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு, உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் நன்கொடைகள் குவிந்து வருகின்றன. கோவில் கணக்குகளை கவனித்த மஹிபால் சிங் என்பவர், பக்தர்கள் அளிக்கும் நன்கொடைகளில் முறைகேடுகள் நடப்பதாக புகார் தெரிவித்திருந்தார். மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவும், இந்த விவகாரத்தில், பா.ஜ., அரசு மவுனம் காப்பதாக குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, முறைகேடு குறித்து விசாரிக்க மூன்று பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை, பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைத்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில், மூத்த வழக்கறிஞர் அனுாப் பிரகாஷ் அவஸ்தி என்பவர் தாக்கல் செய்த மனு: ராமர் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கும் நன்கொடைகள், காணிக்கைகள் முறையாக கையாளப்படுவதில்லை. வரவு - செலவு கணக்குகளை பராமரிப்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை. பல கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடை பணம் கையாடல் செய்யப்பட்டுஉள்ளது. எனவே, இது குறித்து விசாாரிக்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும். கோவில் வரவு - செலவு கணக்குகள், நன்கொடைகள் ஆகியவற்றை கண்காணிக்க, உச்ச நீதிமன்றத்தின் கீழ் இயங்கும் ஒரு நிரந்தர கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, தெரிகிறது. விசாரணையில் தொய்வு இருக்காது ; இது குறித்து, ராமர் கோவில் கட்டுமான கமிட்டி தலைவர் நிருபேந்திர மிஸ்ரா நேற்று கூறியதாவது: ராமர் கோவிலுக்கு பக்தர்கள் அளித்த நன்கொடைகள் காணாமல் போனதாக எழுந்த புகார் தொடர்பான சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் எந்தவொரு அலட்சியமோ, தொய்வோ இருக்காது. தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எதிர் காலத்தில் இது போன்ற தவறு மீண்டும் நடக்காதபடி நடவடிக்கை இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
|