திருமழிசை பேரூராட்சி, பிரையாம்பத்து பகுதியில் உள்ள இளங்காளி அம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக, பூந்தமல்லி நீதிமன்றத்தில் கடந்த 2022ல் வழக்கு தொடரப்பட்டு, அது நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தற்போது ஒரு தரப்பினர், கோவிலில் தீமிதி திருவிழா நடத்துவதாக விளம்பர பேனர் வைத்து, பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து, மற்றொரு தரப்பினர் சார்பில், சில தினங்களுக்கு முன், கோவிலில் எந்தவித திருவிழாவும் நடத்தக்கூடாது என, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை, ஒரு தரப்பினர் அம்மனுக்கு பன்னீர்குடம் எடுக்கும் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் உத்தரவையடுத்து, நேற்று திருவிழா நிறுத்தப்பட்டது. திருவிழா நடத்துவது குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், நீதிமன்றத்தில் பிரச்னையை தீர்த்து, திருவிழா நடத்துவது யார் என உத்தரவு வாங்கி வந்த பின் திருவிழா நடத்தலாம் என, திருவிழா நடத்த வந்த தரப்பினரிடம், வெள்ளவேடு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். அதையடுத்து, நேற்று இளங்காளி அம்மன் கோவிலில் போலீஸ் குவிக்கப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.