இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2026 03:08
சாத்துார்: சாத்துார் இருக்கன் குடி மாரியம்மன் கோயில் ஆடி கடைசி வெள்ளி பெரும் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தை ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் ஆடி மாதம் கடைசி வெள்ளி பெருந்திருவிழா ஆகஸ்ட் 14 நடைபெறுவதை முன்னிட்டு நேற்று கோயில் கொடிமரத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு திருவிழா கொடியேற்றம் நடந்தது. கடையநல்லுார் காசி விஸ்வநாதர் பட்டர், முத்துக்குமார பட்டர், தலைமையில் பட்டர்கள் கோயில் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து திருவிழா கொடியேற்றம் செய்து தீபாராதனை செய்தனர். இவ்விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என கோசமிட்டு அம்மனை வழிபட்டனர். திருவிழா கொடி ஏற்றத்தை தொடர்ந்து நாள்தோறும் கோயில் வளாகத்தில் சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு அம்மனுக்கு தினந்தோறும் அபிஷேகமும் அலங்காரமும் நடைபெறும்.ஆகஸ்ட் 14 ல் அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வைப்பாற்றில் காட்சி தந்து பின்னர் இருக்கன்குடியில் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மறுநாள் திருக்கோயிலை வந்தடைவார். இன்று நடந்த கொடியேற்றுவிழாவில் கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர்கள் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, கோயில் உதவி ஆணையர் இளங்கோவன், சாத்துார் டி.எஸ்.பி. குருசாமி மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் குழு பூஜாரிகள், மற்றும் ஊர் நாட்டாமைகள் முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.