7ம் நுாற்றாண்டில் பாண்டிய நாட்டில் சமண மதம் பரவி,அரசை வசப் படுத்தி சைவ சமயத்தை நலியச் செய்து நசுக்க முயன்ற போது சைவமும், நாடும், அரசும் நலம் பெற்று செழித்தோங்க வேண்டி திருஞானசம் பந்தர் மதுரைக்கு வந்தார். சமணர்களுடன் சொற்போர் நிகழ்த்தி மன்னரின் வெப்புநோய் நீங்க பாசுரம் பாடியும், சமணர்களை அனல்வாதத்தில் வென்றும், புனல்வாதம் புரிய வைகையாற்றில் விட்ட வாழ்க அந்தணர் எனும் திருப் பாசுர ஏடு மதுரையிலிருந்து வைகை நீரை எதிர்த்து நீந்தி வந்து திருவேடகத்தில் வந்து நின்று வாதத்தில் வென்றது வரலாறு. இதனை நினைவூட்டும் வகையில் இங்கு ஆண்டு தோறும் ஆவணிப் பவுர்ணமியில் ஏடு எதிரேறிய விழா நடக்கும். நேற்று நடந்த விழாவில் விநாயகர், திருஞான சம்பந்தர், குலச்சிறை நாயனார் வைகையாற்றங் கரையில் எழுந்தருளினர். வரலாறு விளக்கப் பட்டு சிவனடியார்களால் பாசுரங்கள் பாடப் பட்டன. வறண்ட வைகையில் ஏற்படுத்தப்பட்ட செயற்கை பள்ளத்தில் நீர் நிரப்பப்பட்டு ஏடானது சிறிய மரச்சப்பரத்தில் வைத்து ஆற்றில் விடப்பட்டது. இதன்பின் மலர்கள் துாவி பூஜைகள் செய்யப்பட்டு தீபா ராதனை நடந்தது. கரையில் உள்ள திருஞானசம்பந்தர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாக அலுவலர் இளமதி, ஆய்வர் சாவித்திரி, பரம்பரை அறங்காவலர் சேவுகன், அர்ச்சகர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.