சித்திரைத் திருவிழா பக்தர்கள் வசதிக்கு ரூ. 47 லட்சம் ஒதுக்கீடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2013 10:04
மதுரை: மதுரை சித்திரை விழாவிற்காக ரூ. 47 லட்சம் மதிப்பில் பக்தர்களுக்கு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன என மேயர் ராஜன்செல்லப்பா கூறினார். அவர் கூறியதாவது: பக்தர்களின் வசதிக்காக மாநகராட்சி பல ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்காக ரூ. 47 லட்சத்து 43 ஆயிரத்து 300 ஒதுக்கப்பட்டுள்ளது. தற்காலிக குடிநீர் குழாய்கள் அமைக்கப்படுகின்றன. அழகர் ஆற்றில் இறங்குவதற்காக பாதை அமைப்பது போன்ற பணிகள் நடைபெறுகின்றன. சுகாதார தினக்கூலி துப்புரவு பணியாளர்கள் 560 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். நகர்ப் பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளிக்க 100 டன் சுண்ணாம்பு, 10 டன் பிளீச்சிங் பவுடர், 2000 லிட்டர் பினாயில் பயன்படுத்தப்படும். கோ.புதூர், தல்லாகுளம், ராமராயர் மண்டபம் உட்பட 5 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆற்றில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படும். விழா காலத்தில், மின்தடை ஏற்படாமல் இருக்க அரசு மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம். குடிநீர் பிரச்னையை சமாளிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அணையில் வரும் ஜூன் வரை நகருக்கு தேவையான குடிநீர் உள்ளது. ஏப்.,20க்கு பின் அணையில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. மேலும், 400 "போர்வெல் அமைக்க இடம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், காவிரியில் இருந்து குடிநீர் பெறவும் திட்டம் ஆய்வில் உள்ளது. இதற்கான முதற்கட்டப் பணி நடந்து வருகிறது. மதுரையிலும், "அம்மா மலிவு விலை உணவகம் திறப்பதற்கு 16 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன, என்றார். துணைமேயர் கோபாலகிருஷ்ணன், கமிஷனர் நந்தகோபாலன், நகர பொறியாளர் மதுரம் உடனிருந்தனர்.