பதிவு செய்த நாள்
15
ஏப்
2013
10:04
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ஓவியர் காந்திராஜன், தமிழக கோவில்களில் உள்ள, நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த, 8,000க்கும் மேற்பட்ட ஓவியங்களை புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தி உள்ளார். கடந்த, 12 ஆண்டுகளாக, கோவில் ஓவியங்களை சேகரிக்கும் பணியில், இடைவிடாது பணியாற்றி வருகிறார். சமீபத்தில், சென்னை லலித் கலா அகடமியில், இவர் காட்சிப்படுத்திய கோவில் ஓவியங்கள், பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தூரிகை வழியாக கைகுலுக்கியவரிடம் பேசியதில் இருந்து...உங்கள் பார்வை, கோவில் ஓவியங்கள் மீது, திரும்பியது ஏன்?ஓவிய மரபு குறித்த ஆய்வு புத்தகத்தை எழுத, களஆய்வு மேற்கொண்ட போது, கோவில் ஓவியங்கள் மீது கவனம் திரும்பியது. ஏனெனில், தமிழக ஓவிய மரபு, பாறை, குகை என்ற படிநிலைகளை தாண்டி, கோவில்களில் நிலைத்த வடிவம் பெற்றது. ஒரு காலகட்டத்தில், ஒட்டுமொத்த ஓவியங்களும் கோவில்களில் குவிந்தன. ஓவியங்களின் துவக்கப்புள்ளியாக இல்லை என்றாலும், மையப்புள்ளியாக கோவில்கள் உள்ளன. கோவில்கள், ஓவியங்களின் ஆலயம். கோவில்களின் கட்டுமானமும், அவற்றின் புராதனமும் அழியாமல் காக்க வேண்டியது, காலத்தில் கட்டாயம்.நிலவுடைமை சமூகத்தின் தொடர்ச்சியும், ஆதிதிராவிடர்களின் நுழைவு தடுப்பும் கோவில்களில் இருந்து தானே,துவங்கியது? கோவில்களை பாதுகாப்பது, அதன் தொடர்ச்சியாகாதா?நிலவுடைமை தகர்ந்து விட்டது; ஆலய நுழைவும் நடந்து விட்டது; இந்த பிரச்னைகளுக்காக, கோவில்களை ஒதுக்குவது கூடாது. நம் கலையும், பண்பாடும், நாகரிகமும், கோவில்களில் பின்னி பிணைந்துள்ளன.
அந்த சங்கிலியின் கண்ணிகளை அறுத்து விட்டால், நம் மரபின் நீண்ட நெடிய பண்பாட்டு பயணம், அடுத்த தலைமுறைக்கு சென்று சேராது.இலக்கியம், ஓலைச்சுவடி, செப்பேடு, தொல்பொருள், இவற்றின் மூலம் அறியப்படும் வரலாறுக்கும், ஓவியங்கள் மூலம் அறியப்படும் வரலாறுக்கும் என்ன வேறுபாடு?இலக்கியம், தொல்பொருள், கல்வெட்டு போன்றவற்றில் காணப்படும் வரலாறு, உணர முடிகிற வரலாறு; ஆனால், ஓவியங்களின் மூலம் அறியப்படும் வரலாறு, காட்சிப் பொருள் வரலாறு.கல்வெட்டில், மன்னர்கள் பற்றியும், அவர்கள் வழங்கிய கொடை பற்றியும், ஒரு சில வரிகள் இருக்கும். ஆனால், ஓவியங்களின் மூலம் அறியப்படும் வரலாற்றில், குறிப்பிட்ட மன்னர், அவரது உருவம், அவரது ஆடையின் வண்ணம், அதன் வேலைப்பாடு, அவரது ஆட்சி காலத்தில், குடிமக்கள் எப்படி இருந்தனர் ஆகியவற்றை எல்லாம் காட்சியாகவே காண முடியும்.தமிழர்களின் கதை சொல்லும் மரபு, ஓவியங்களில் எப்படி வெளிப்படுகிறது?கோவில்களை, தமிழ் மன்னர்கள், ஆன்மிக கதை சொல்லும் தளமாக பயன்படுத்தினர். மகாபாரத, ராமாயண கதைகள், கோவில் சுவர்களில், தொடர் ஓவியமாக வரையப்பட்டுள்ளன.நேர்த்தியான திரைக்கதை போல், அந்த ஓவியங்கள் அமைந்துள்ளன. அவை நம் நாட்டின் பொக்கிஷங்கள்.நிலப்பரப்பின் அடிப்படையில், கோவில் ஓவியங்களில், என்ன மாதிரியான வேறுபாடு வெளிப்படுகிறது?நதிக்கரை நகரங்களில் உள்ள கோவில்களில் காணப்படும் ஓவியங்களில், நுட்பமான வேலைப்பாடுகள் உள்ளன. இதன் பின்னணியில், நிலம், உழைப்பு, ஓய்வு போன்றவை அடங்கியுள்ளன. நதிக்கரை நகரங்களில், விளைச்சல் அதிகமாக இருந்ததால், ஓய்வும் அதிகமாகவே இருந்தது. அதனால், ஓவியங்களின் நுட்பமும் அதிகமானது. மற்ற நகர கோவில்களின், ஓவிய வளர்ச்சி பிற்காலத்தில் நடந்தது.ஓவியங்களை பாதுகாப்பதில், இந்து சமய அறநிலைய துறையின் செயல்பாடுகள் எப்படி உள்ளன?ஈவு இரக்கமின்றி, ஒரு உயிரை கொல்வது போல், அறநிலைய துறையின் செயல்பாடுகள் உள்ளன. ஆயிரமாண்டு, நூற்றாண்டு பழமை வாய்ந்த ஓவியங்களின் மீது, ஆணி அடிப்பது, குழாய் பதிப்பது, காலண்டர் மாட்டுவது, சுவிட்ச் பாக்ஸ் அமைப்பது போன்ற வேலைகளில்,அறநிலையத் துறையே ஈடுபடுகிறது. மேலும், கோவிலுக்கு வரும் பார்வையாளர்கள், தேர்வு எண்ணையும், காதல் ஜோடி பெயர்களையும் எழுதி செல்கின்றனர். இது குறித்த அக்கறை, அறநிலைய துறைக்கு துளியளவும் இல்லை. நிலவுடைமை தகர்ந்து விட்டது;ஆலய நுழைவும் நடந்து விட்டது; இந்தபிரச்னைகளுக்காக, கோவில்களை ஒதுக்குவது கூடாது. நம் கலையும், பண்பாடும், நாகரிகமும், கோவில்களில் பின்னி பிணைந்துள்ளன.