பதிவு செய்த நாள்
15
ஏப்
2013
11:04
நாகர்கோவில்: குமரி மாவட்ட கோயில்களில் சித்திரை விஷூ கணி காணும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பழங்கள், காய்கறிகள் படைத்து வழிபட்டு சென்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சித்திரை விஷூ கணிகாணும் நிகழ்ச்சி நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பழ வகைகள், காய்கறிகள் படைத்து பக்தர்கள் வழிபட்டனர். அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். சித்திரை மாதம் முதல் நாள் விஷூ கணி காணும் நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று சித்திரை முதல் நாள் என்பதால் குமரி மாவட்டத்தில் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து புத்தாடை அணிந்து கோயிலுக்கு சென்றனர்.வீடுகளிலும் பொதுமக்கள் இறைவன் முன் காய், கனிகளை படைத்துவழிபட்டனர். குழந்தைகள் முதல்பெரியவர்வரை கணிகண்டு புதிய ஆண்டு தங்களுக்கு எல்லாவளமும் வேண்டும் என இறைவனை வழிபட்டனர்.மாவட்டத்தில் நாகர்கோவில் நாகராஜாகோயில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோயில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், நடுகாட்டு இசக்கியம்மன்கோயில், முப்பந்தல் இசக்கியம்மன்கோயில், கிருஷ்ணன்கோயில் ஆதிபராசக்தி சக்தி பீடம், மண்டைக்காடு பகவதியம்மன்கோயில், குமாரகோவில் முருகன் கோயில், வெள்ளிமலை முருகன் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் அதிகாலையிலேயே நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதிகாலையிலேயே கோயிலுக்கு வந்த பக்தர்கள் பழங்கள், காய்கறிகள் படைத்தனர். பூஜைக்கு பின் அவை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. சித்திரை விஷூ தரிசனத்திற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து சென்றனர். மேலும் கைநீட்டமும் வழங்கப்பட்டது.