பதிவு செய்த நாள்
17
ஜூலை
2013
11:07
காங்கயம்: காங்கயம், சிவன்மலை கோவிலுக்கு, சொந்தமான, ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள, 10 ஏக்கர் நிலத்தை அறநிலையத்துறையினர் மீட்டனர்.திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே, சிவன்மலையில் சுப்ரமணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, 10.07 ஏக்கர் நிலம் உள்ளது. அரசு உத்தரவுபடி, கோவில் மற்றும் வருவாய்த்துறை ஆவணங்களை ஆய்வு செய்த போது, இது,கோவிலுக்கு சொந்தமான நிலம் என, கண்டறியப்பட்டது. இதையடுத்து, நேற்று, அங்கு சென்ற, அறநிலையத்துறை அதிகாரிகள் நிலத்தை மீட்டு, கோவிலுக்கு சொந்தமான இடம் என, அறிவிப்பு பலகை வைத்தனர். சம்மந்தப்பட்ட நிலத்தை, மூன்று பேர் ஆக்கிரமித்திருந்ததோடு, வருவாய்த்துறை சப்டிவிஷன் செய்த ஆவணம் உள்ளதாக தெரிவித்தனர். இது குறித்து,கோவில் அதிகாரிகள் கூறுகையில், "கோவிலுக்கு சொந்தமான நிலம் என, ஆவணம் உள்ளது. அதன் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆவணங்கள் முறைகேடாக மாற்றப்பட்டிருந்தாலும், அறநிலையத்துறையை கட்டுப்படுத்தாது என்றனர். செயல் அலுவலர் நந்தகுமார் கூறியதாவது: கோவில் மற்றும் வருவாய்த்துறை ஆவணங்களில், கோவில் பெயரில், 10 ஏக்கர் நிலம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அருகில், தனியார் நிலம் உள்ளதால், அந்த ஆவணங்களை வைத்துக்கொண்டு, கோவில் நிலத்தையும் அனுபவித்து வந்துள்ளனர். ஆவணங்களின் அடிப்படையில் நிலம் மீட்கப்பட்டுள்ளது; வருவாய்த் துறையினரிடம் நிலம் குறித்த, அனைத்து ஆவணங்களையும் கேட்டுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.