பதிவு செய்த நாள்
31
ஜூலை
2013
10:07
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்ட விழா, ஆக., 1 ல், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆண்டாள் கோயிலில் இன்று, "தேங்காய் தொட்டு நியமனம் பெறுதல் நிகழ்ச்சி , நாளை (ஜூலை 31) மாலை, "சேனை முதல்வர் புறப்பாடு நடக்கிறது. ஆக.,1 காலை 8.30 மணிக்கு, கருடாழ்வார் முத்திரை பதித்த கொடி, நான்கு ரதவீதிகள் சுற்றி, கொடிமரத்தில் ஏற்றப்படும். இரவு 11 மணிக்கு, பதினாறு வண்டி சப்பரத்தில், ஆண்டாள், ரெங்க மன்னார் பவனி நடக்கும். ஆக., 5 காலை 9 மணிக்கு, ஆடிப்பூர மண்டபத்தில் பெரியாழ்வார் எழுந்தருள, பெரிய பெருமாள், சுந்தரராஜன், திருவேங்கட முடையான், திருத்தங்கல் அப்பன், ஆண்டாள், ரெங்க மன்னாருக்கு, மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு, ஐந்து கருட சேவையில், ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும்; ரெங்க மன்னார் பெரிய கருட வாகனத்திலும், பெரியாழ்வார் சின்ன அன்னவாகனத்திலும் வீதி உலா வருவர். ஆக., 7 இரவு 8 மணிக்கு, கிருஷ்ணன் கோவிலில், ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயனநிலையில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆக., 9 ஆடிப்பூரம் அன்று அதிகாலை ஏகாந்த திருமஞ்சனம், காலை 8.05 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விழாவின் கடைசி நாள் மாலை, ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு புஷ்பயாகம் நடக்கும். தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் சுப்பிரமணியன், கோயில் ஊழியர்கள், ஏற்பாடுகளை செய்துள்ளனர்.