திருப்பரங்குன்றத்தில் 6 மணி நேரம் ஆடி அசைந்து வந்த பெரிய வைரத்தேர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2026 10:04
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் வெள்ளத்தில் மலையைச் சுற்றி தேர் வலம் வந்தது. இன்று (ஏப். 6) தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.
நேற்று அதிகாலை 5:30 மணிக்கு உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து, முத்தங்கி அலங்காரமாகி நீலம், பச்சை பட்டால் பரிவட்டம் கட்டினர். கோயில் முன் நிறுத்தியிருந்த பெரிய வைரத் தேரில் எழுந்தருளினர். கருப்பண்ண சுவாமிக்கு பூஜை முடிந்து, தேர் சக்கரங்களில் தேங்காய் உடைத்தனர். சிவாச்சாரியார் சுவாமிநாதன் தேரில் ஏறி வெள்ளை வீசியதும், பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். காலை 6:29 மணிக்கு நிலையில் இருந்து தேர் புறப்பாடானது. விநாயகர் எழுந்தருளிய சட்டத்தேர் முன்செல்ல, பெரிய வைரத்தேர் 6 மணி நேரம் கிரிவலப்பாதையில் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வலம் வந்தது. மதியம் 12:19 மணிக்கு தேர் நிலை நிறுத்தப்பட்டது.
தராசு முருகன் பின் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இரவு தங்க மயில் வாகனத்தில் வீதிஉலா நிகழ்ச்சியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அருள்பாலித்தனர். கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, அறங்காவலர் சண்முகசுந்தரம், துணை கமிஷனர் ஞானசேகரன் பங்கேற்றனர். கோயில் தேரில் ஆறுமுகங்களுடன் அமர்ந்த நிலையில் தராசுடன் முருகப் பெருமான் சிற்பம் உள்ளது. திருப்பரங் குன்றம் மலை உச்சியில் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற தடை செய்த பிரச்னையில், ‘திருப்பரங்குன்றம் தராசுக்காரர் பூமி. இங்கு தவறு செய்தோர் தண்டிக்கப்படுவர்’ என அப்பகுதி மக்களிடம் தராசு முருகன் சமீபகாலமாக பேசு பொருளாக இருந்தார். நேற்றைய தேரோட்டத்தில் திருப்பரங்குன்றம் கிராம சபை இளைஞர்கள் தராசுடன் முருக பெருமான் படம் பொறித்த பனியன் அணிந்து பங்கேற்றனர்.
ஒரு மணி நேரம் தாமதம்: பஸ் ஸ்டாண்ட்டை அடுத்து பெரியரத வீதியில் ரோட்டோரம் இருந்த சிமென்ட் தளத்தில் தேர் சக்கரம் மோதி நின்றது. எந்த முயற்சியாலும் சக்கரத்தை நகர்த்த முடியவில்லை. ஜாக்கி பயன்படுத்தி சக்கரத்தை வெளியில் எடுத்தனர். அந்த இடத்தில் தேர் ஒரு மணி நேரம் நின்றிருந்தது. வெயிலும் கடுமையாக இருந்ததால் தேர் இழுத்த பக்தர்கள் அவதிப்பட்டனர்.