பதிவு செய்த நாள்
16
நவ
2013
10:11
சேலம்: கார்த்திகை மாதம் நாளை துவங்குவதால், சேலம் மாநகரில் உள்ள கடைகளில், சபரிமலை யாத்திரைக்குரிய பொருட்கள் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளது. கார்த்திகையில் துவங்கி தை மாதம் வரை, தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள், துளசிமணி மாலை அணிந்து, சபரிமலைக்கு யாத்திரை செல்கின்றனர். கார்த்திகை மாதம் மாலை அணியும் பக்தர்கள், ஒரு மண்டலம் (48 நாள்) விரதம் இருந்து, சபரிமலைக்கு சென்று மகரஜோதி தரிசனம் செய்த பின், விரதத்தை முடிக்கின்றனர். சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்காக, ஐப்பசி மாதத்தின் கடைசி வாரத்திலேயே காவி வேஷ்டிகள், துண்டுகள், துளசிமணி மாலைகள், பூஜை பொருட்கள் விற்பனை துவங்கி விடுகிறது. சேலத்தில் பிரபல ஜவுளிக் கடைகள், காதி பவன்கள் மற்றும் வழக்கமான பூஜை பொருள் விற்பனை கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. சபரிமலை யாத்திரைக்கு மாலை அணியும் பக்தர்களுக்காக, சேலம் கந்தாஸ்ரமம், பெங்களூரு பைபாஸ் ஐயப்பா ஆஸ்ரமம் ஆகிய இடங்களிலும் மாலை அணிவதற்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. பூஜை பொருட்கள் விற்பனை செய்யும், சேலம் சின்னக்கடை வீதியை சேர்ந்த கணேசன் கூறியதாவது: சபரிமலைக்கு வழக்கமாக செல்லும் பக்தர்களுக்கு மட்டுமின்றி, புதிதாக மாலை அணியும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் விற்பனை செய்கிறோம். கோவில் நிர்வாகங்களும், பூஜை பொருட்களை மொத்தமாக வாங்கிச் சென்று, பக்தர்களுக்கு வழங்கி வருகின்றன. காவி வேஷ்டி, துண்டுகள் பல்வேறு தரத்திலும், விலையிலும் விற்பனைக்கு உள்ளது. இவற்றை செட்டாகவும், தனித்தனியாக பிரித்தும் விற்பனை செய்கிறோம். துளசி, படிகம், வெட்டிவேர் என தனித்தனியாகவும், கலந்தும் தயாரித்த மாலைகளையும் விற்பனைக்கு வைத்துள்ளோம். இருமுடி கட்டும் பைகள், போர்வை, இருமுடி கட்ட தேவையான பூஜை பொருட்கள் அடங்கிய பாக்கெட் ஆகியவற்றையும் விற்பனை செய்கிறோம். நெய் உட்பட அனைத்து பொருட்களையும், தரமானதாகவும், நியாயமான விலையில், வழங்கி இறை பணியில் எங்களையும் இணைத்துக் கொள்கிறோம், என்றார். காவி வேஷ்டி, துண்டு, சட்டை அடங்கிய செட் (ஒன்று), 350 முதல் 620 ரூபாய் வரையிலும், சட்டை இல்லாமல் துண்டு, வேஷ்டி அடங்கிய செட், 200 முதல், 350 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. வேஷ்டி மட்டும், 145 முதல் 285 ரூபாய் வரையிலும், துண்டு மட்டும், 55 முதல், 124 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இருமுடி பை, 85 முதல், 175 ரூபாய் வரையிலும், பூஜை பொருட்கள் அடங்கிய பாக்கெட், 85 முதல், 120 ரூபாய் வரையிலும் மொத்தமாகவும், தனித்தனியாக பிரித்தும் விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய், பழம் போன்றவையும் விற்பனை செய்யப்படுகிறது. சபரிமலைக்கு மாலை அணியும் பக்தர்கள், சேலம் கடை வீதியில், ராஜகணபதி கோவில் அருகே செயல்படும் கடைகளிலும், காதி பவன்களிலும் தேவையான பொருட்களை வாங்கலாம்.