திருப்பரங்குன்றத்தில் சுற்றுலா வாகனங்களுக்குத் தடை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2013 10:11
திருப்பரங்குன்றம்: வரும் தை மாதம் முடிய திருப்பரங்குன்றம் நகருக்குள் சுற்றுலா வாகனங்கள் நுழைய போலீசார் தடைவிதித்துள்ளனர். தென்பரங்குன்றத்தில் அவற்றை நிறுத்தவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் வெளியூர்களில் இருந்து இங்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். 50 திருமண மண்டபங்களில் முதல் நாள் இரவு தங்கி, மறுநாள் காலை சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவர்களது வாகனங்களை நகருக்குள் அனைத்து தெருக்களிலும் கண்டபடி நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும் இடையூறாக இருந்தது. இதனால் நேற்று முதல் மூன்று மாதங்களுக்கு நகருக்குள் சுற்றுலா வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா வாகனங்கள் மேம்பாலம், தியாகராஜர் பொறியியல் கல்லூரி வழியாக தென்பரங்குன்றத்தில் நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முக்கிய இடங்களில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். தென்கால் கண்மாய் கரை பைபாஸ் ரோட்டில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. நெரிசலை ஒழுங்குபடுத்த இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமையில் வாகனங்களில் போலீசார் ரோந்து செல்கின்றனர்.