பதிவு செய்த நாள்
29
நவ
2013
10:11
பவானி: பவானி கூடுதுறை காவிரி ஆற்றில், தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, கோவிலில் தரிசனம் செய்வதால், கோவிலுக்கான வருவாய் உயர்ந்துள்ளது. பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், காவிரி ஆற்றங்கரையில் இருந்து கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள இரட்டை பிள்ளையார் கோவில் முன், கார்த்திகை, ஒன்றாம் தேதி உள்ளூர் ஐயப்ப பக்தர்கள், மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். தொடர்ந்து, பிற மாவட்டம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து வருகை தரும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம், அதிகரிக்க துவங்கியது. கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களின் வசதிக்காக பின்பகுதியில், 50க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைக்க வசதிகள் செய்து கொடுத்தனர். பவானி கூடுதுறைக்கு வந்து காவிரியில் புனித நீராடி, வேதநாயகி உடனமர் ஸ்ரீசங்கமேஸ்வரர் சுவாமியை வழிபட்டு, சபரி மலைக்கு புறப்பட்டு செல்கின்றனர். இவ்வாறு வரும் ஐயப்ப பக்தர்கள் மூலமும், அவர்களது பஸ், கார், வேன், சாமி தரிசனம் செய்ய சிறப்பு கட்டணம், மற்ற இதர வருமானங்கள் ஆகியவை சேர்ந்து கடந்த, 12 நாட்களில் மட்டும், 10 லட்சம் ரூபாய் கோவிலுக்கு வருவாய் கிடைத்துள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பவானி கூடுதுறையில், ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொது பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம், 24 மணி நேரமும் கோவில் நிர்வாகம் மற்றும் போலீஸார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.