பதிவு செய்த நாள்
28
ஜூலை
2010
10:07
கிராமத்தில் இருந்த பசுக்கள் பால் கறக்க மறுத்தன. குழந்தைகள் பாலின்றி சிரமப்பட்டனர். அந்த ஊருக்கு யாராவது புது பசுக்களை வாங்கி வந்தால் அவை நோய் கண்டு இறந்தன. ஊரெங்கும் ஒரே பாம்பு புற்றுகளாக காட்சியளித்தது. எப்போதும் இல்லாத வகையில் திடீரென புற்றுகள் தோன்றக் காரணம் என்ன என்ற விசாரணை ஆரம்பமானது. அவ்வூர் பசுக்களை மேய்க்கும் இடையனை பிடித்து மக்கள் விசாரித்தனர். அவன் சொன்ன விஷயம் அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் ஒருமுறை வழக்கம் போல் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். ஒரு மாட்டிடம் மட்டும் தொடர்ந்து பால் இல்லாமல் இருந்தது. மதிய நேரத்தில் பார்த்தால் அந்த பசுவின் மடி நிறைந்திருக்கும். மாலையில் வீடு திரும்பும் போது மடி காலியாகி இருக்கும். பால் இல்லாதது பற்றி மாட்டின் சொந்தக்காரர் கேட்டால் அவன் பதில் சொல்லி ஆக வேண்டுமே என்ற பயம். யாராவது அந்த மாட்டின் பாலைக் கறக்கிறார்களா என அவன் கண்டுபிடிக்க முயன்றான்.
ஒருநாள் மாட்டின் பின்னாலேயே சென்றான். அந்த மாடு ஒரு புற்றின் அருகில் போய் நின்றது. புற்றிலிருந்து ஒரு நாகப்பாம்பு வெளியே வந்தது. அந்த பாம்புக்கு குழந்தையின் முகம் இருந்தது. அது பசுவிடம் பால் குடிக்க ஆரம்பித்தது. இடையனுக்கு வந்தது கோபம்! அருகில் கிடந்த பாறாங்கல்லை எடுத்தான். ஒரே போடாக அதன் தலையில் போட்டான். அலறித்துடித்த பாம்பு சாபமிட்டது. என்னைக் கொன்ற இந்த ஊரில் இனி எந்த மாடும் பால் கறக்காது. இந்த ஊரெல்லாம் பாம்பு புற்றாகி மக்களை பயமுறுத்தும். யாரும் நிம்மதியாக தூங்க முடியாது. இந்த ஊரின் பெயரே இனி புற்றூர் என மாறும். பசுக்கள் வளர்ப்போர் பெரும் நஷ்டமடைவர், என்று சொல்லி விட்டு இறந்து போனது. அன்றுமுதல் தான் ஊரில் இந்த நிலை ஏற்பட்டு விட்டதாக இடையன் கூறினான். மக்கள் மிகவும் வருத்தப்பட்டனர். இந்த நிலைமையை மாற்றாவிட்டால் ஊரையே காலி செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை உண்டாயிற்று. அந்த ஊரின் பெயர் கொல்ஸ்பள்ளி. ஆனாலும் பசுக்கள் அதிகம் இருந்ததால், அதை ஆயர்பாடி என்றே செல்லமாக அழைத்தனர்.
செல்வச் செழிப்பு மிக்க அவ்வூர் வாடி வதங்கிப் போனதால் மக்கள் வாழ்வதற்கே சிரமப்பட்டனர். ஏழ்மை தாண்டவமாடியது. அவ்வளவு சிரமத்திற்கிடையிலும் ஒரு குடும்பம் மட்டும் புகழோடு விளங்கியது. ராஜூ வம்சத்தாரின் ஆளுகைக்கு உட்பட்டு அப்பகுதி அமைந்திருந்தது. அந்த வம்சத்தில் ஒரு காலத்தில் மிகப் பெரிய அறிஞராகவும், மகானாகவும் விளங்கியவர் வெங்காவ தூதர். அவர் வம்சாவழியில் வந்தவர் ரத்னாகர கொண்டம ராஜூ. நூறாண்டு காலம் வாழ்க, என்ற வாழ்த்து இவருக்கு தான் பொருந்தும். ஏனெனில் இவர் நூறு வயது வாழ்ந்தவர். ராமாயணத்தை எப்போதும் படித்துக் கொண்டிருப்பார். ராமாயண கதைகளை மக்களுக்கு கூறுவார். ராமாயணத்தில் என்ன கேள்வி கேட்டாலும் தயங்காமல் பதில் சொல்வார். கொண்டமராஜூக்கு இரண்டு மகன்கள். இவர்களுக்கு தங்கள் குடும்பத்தின் குல விளக்காக விளங்கிய வெங்காவ தூதரின் பெயரையே வைத்தார் கொண்டமராஜூ. மூத்த மகன் பெத்த வெங்கப்ப ராஜூ என்றும், இளைய மகன் சின்ன வெங்கப்ப ராஜூ என்றும் அழைக்கப்பட்டனர்.
பெத்த வெங்கப்ப ராஜூ வளர்ந்ததும் அவருக்கு ஈஸ்வாராம்பா என்ற பெண்மணியை மணமுடித்து வைத்தார் கொண்டம ராஜூ. இவர்கள் இல்லறத்தை நல்லறமாக நடத்தி ஒரு ஆண் மகனையும், இரண்டு பெண் குழந்தைகளையும் பெற்றனர். பெரிய மகன் பெயர் சேஷமராஜூ. மகள்கள் வெங்கம்மா, பர்வதம்மா. இனிமையாக கழிந்து கொண்டிருந்த அந்தக் குடும்பத்தின் வாழ்க்கையில் மேலும் இனிமை சேர்க்க விரும்பினார் பகவான். ஒருநாள் கொண்டமராஜூவின் மனைவி ஒரு கனவு கண்டார். அவரது கனவில் சத்ய நாராயணன் தோன்றினார். அம்மா! நாளை உன் மருமகள் உடலில் ஒரு வியக்கத்தக்க மாற்றம் ஏற்படும். அதுகண்டு பயப்பட வேண்டாம், என்றார் சத்திய நாராயணன். மாமியார் தன் மருமகளை அழைத்து விபரம் சொன்னார். மருமகள் ஈஸ்வராம்பா அன்று கிணற்றடியில் நின்று பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். தண்ணீர் இறைக்க ஆரம்பித்தார். அப்போது வானிலிருந்து ஈஸ்வராம்பாவை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது அந்த நீல நிற ஒளி. ****
ஈஸ்வராம்பாவுக்கு சற்று நடுக்கம். என்ன இது! இப்படி ஒரு தேஜஸான ஒளி...! இது ஏன் என்னை நோக்கி பாய்ந்து வருகிறது? கலவரப்பட்ட அந்தத் தாய் அந்த ஒளியின்
சக்தியை தாங்க முடியாமல் மயங்கி விட்டார். முதல் மூன்று குழந்தைகளுக்கு பிறகு நான்காவதாக ஒரு ஆண் மகன் பிறக்க வேண்டும் என்பது ஈஸ்வராம்பாவின் விருப்
பம். ஆனால் அடுத்தடுத்து நான்கு முறை கருவுற்றாலும் கர்ப்பம் கலைந்து விட்டது. ஈஸ்வராம்பா மிகவும் மன வருத்தமடைந்தார். அவரது மாமியார் லட்சுமம்மா தன்
மருமகள் மீது உயிரையே வைத்திருந்தார். உலகத்தில் உள்ள மாமியார்களெல்லாம் தன் மருமகளை நடத்தும் முறை பற்றி லட்சுமம்மாவிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு மருமகள் மெச்சும் மாமியார் அவர்.தெய்வக் குழந்தை பிறக்கப்போகும் அந்த வீட்டில் இருந்தவர்களின் குணமும் தெய்வீகமானதாகவே இருந்தது. லட்சுமம்மா தன் மருமகள் கருவுற பகவானை பிரார்த்தித்தபடியே இருந்தார். ஒருமுறை ஒரு வீட்டிற்கு சென்றிருந்த போது, அங்கு சத்தியநாராயண பூஜை நடந்தது. அந்த பூஜை மிகவும் விசேஷமானதாகும். பக்தி சிரத்தையுடன் அதை நடத்தினால் நல்லதை தவிர வேறெதுவும் நடக்காது. அந்த பூஜையில் கலந்து கொண்ட லட்சுமம்மா, இருக்கும் விரதங்களுடன் இந்த விரதத்தையும் தன் வீட்டில் மேற்கொண்டார்.
அர்ச்சகர் ஒருவர் இதை மிகவும் சிறப்பாக நடத்தி தந்தார். ஒருமுறை லட்சுமம்மாவின் கனவில் தோன்றிய சத்தியநாராயணர், உன் வீட்டில் ஒரு அற்புதம் நிகழப் போகிறது,என கூறி இருந்தார். இந்த நேரத்தில் தான் இந்த நீல ஒளி அற்புதம் நிகழ்ந்தது. அந்த ஒளி ஈஸ்வராம்பாவின் வயிற்றில் அணுஅணுவாய் இறங்கியது. கிணற்றடியில் மயங்கிஇருந்த ஈஸ்வராம்பா சற்று நேரத்தில் எழுந்தார். அவரது மாமியார் அவரை ஏற்கனவே எச்சரித்திருந்தார். இதுபோல ஏதாவது அற்புதம் நடந்தால் நீ அஞ்ச வேண்டாம் மருமகளே, என சொல்லி இருந்ததால், ஈஸ்வராம்பா இதுபற்றி முதலில் பயந்தாலும் பின்பு சுதாரித்துக் கொண்டார். சிறிது காலத்தில் கர்ப்பமாகவும் ஆனார். மருமகள் கர்ப்பமானதை அறிந்து லட்சுமம்மா பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர் பூஜை, புனஸ்காரங்களில் இன்னும் தீவிரமாக ஈடுபட்டார். ஈஸ்வராம்பாவை அனைவரும்அன்புடன் கவனித்துக் கொண்டனர். அப்போது தான் அந்த கிராமத்திற்கு வந்தார் வெங்காவ தூதர். ஏற்கனவே வெங்காவதூதர் என்ற பக்திமானின் வம்சத்தவரேகொண்டம ராஜூவின் குடும்பத்தினர். அவரைப் போலவே பெயர் கொண்ட ஒருவர் வந்ததும், கொண்டமராஜூ மகிழ்ச்சி கொண்டார்.
மகாராஷ்டிராவில் இருந்து வந்த அவரது பிரசங்கம் நகைச்சுவையாக இருக்கும். இதற்காகவே மக்கள் அவரைச் சுற்றி சுற்றி வருவார்கள். கடவுள் மனிதனுக்கு கொடுத்தமிகப் பெரிய வரப்பிரசாதம் நகைச்சுவை. இதை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் கூட்டம் என்றுமே அதிகமாக இருந்திருக்கிறது. இப்போதும் இருக்கிறது. ஒருநகைச்சுவை பட்டிமன்றம் என்றால் கூட எவ்வளவு கூட்டம் கூடுகிறது என்பது நாம் அறிந்தது தான். கொண்டமராஜூ அவரது பிரசங்கத்தை தவறாமல் கேட்கச் செல்வார். ஒருமுறை வெங்காவ தூதர், கொண்டமராஜூவை ஒரு தனியிடத்தில் சந்தித்தார். அவரது கையைப் பிடித்தார். பேச வாய் வரவில்லை. இருப்பினும் நா தழுதழுக்க, ராஜூ! நாராயணன் இங்கு அவதரிக்க போகிறார். அதற்காக காத்திரு, என காதோரமாக சொன்னார். கொண்டமராஜூவும் தலை அசைத்தார். ஆனால் எங்கே எப்படி நாராயணன்அவதாரம் எடுக்கப் போகிறார் என்பது அவருக்கு புரியவில்லை. அந்த நேரத்தில் கொண்டமராஜூவின் வீட்டில் விசித்திரமான சம்பவங்கள் நிகழ்ந்தன. அவர் வீட்டில் இரவு நேரத்தில் இனிய இசை ஒலித்தது. வெங்கப்பராஜூ நாடகங்கள் மீது அபிமானம் கொண்டவர். அவரது வீட்டில் நாடக ஒத்திகைகள் நடந்து கொண்டிருக்கும்.நாடகத்துக்காக யாரோ இசைக்கருவிகளை மீட்டுகிறார்களோ என அந்த அறையைப் போய் பார்த்தால் அங்கு யாருமே இல்லை. கொண்டமராஜூ அதிர்ச்சி அடைந்தார். அப்படியானால் அந்த தெய்வீக இசை எங்கிருந்து வந்தது? அதை மீட்டியவர் யார்?
—தொடரும் 02