பதிவு செய்த நாள்
23
ஆக
2014
02:08
தஞ்சாவூர் : வனத்துறை கெடுபிடியால், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்கு, யானை வாங்குவதில் சிக்கல் உள்ளது என, அறநிலையத் துறையினர் கைவிரித்து விட்டனர். ராஜராஜ சோழனால், கி.பி., 1010ம் ஆண்டு, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. யுனெஸ்கோ நிறுவனம், இந்த கோவிலை, உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்து உள்ளது. ’வீரபாண்டிய கட்டபொம்மன்’ சினிமா படம் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து, 1960ம் ஆண்டு, தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு, நடிகர் சிவாஜி கணேசன், ’வெள்ளையம்மாள்’ என பெயரிடப்பட்ட, 10 வயது பெண் யானையை பரிசாகக் கொடுத்தார். புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து, வெள்ளையம்மாள் யானை, 1985ம் ஆண்டு, தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்கு, நிரந்தரமாக இடம் பெயர்ந்தது. அதன் பிறகு, கோவில் விழாக்களில், வெள்ளையம்மாள் யானை கண்டிப்பாக இடம் பெறும்.
கடந்த ஆண்டு, செப்., 13ம் தேதி, 63 வயதான வெள்ளையம்மாள் யானை, உடல்நலக் குறைவால் இறந்தது. இன்றும், கோவிலுக்கு வரும் பக்தர்கள், வெறுமையாக இருக்கும் யானை மண்டபத்தைப் பார்க்கும் போது, வெள்ளையம்மாள் யானை, மனதிற்குள் வந்து செல்லும். இதையடுத்து, புதிய யானையை கொண்டு வர கோவில் நிர்வாகம், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், வனத்துறை சட்டத்தை காரணம் காட்டி, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரண்மனை தேவஸ்தான அதிகாரிகள் கைவிரித்து விட்டனர். இது குறித்து, தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறையின் உதவி கமிஷனர், ஞானசேகர் கூறியதாவது: சிங்கம், புலி போன்ற விலங்குகள் போல, யானையும், வனத்துறையின், ’ஏ’ கிரேடு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, யானையை வாங்குவதும், விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றமாகும். இதனால், அரசு துறை சார்பில், நேரடியாக யானை வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், சட்ட விதிமுறைகள் படி, யாராவது கோவிலுக்கு நன்கொடையாக யானை அளித்தால், ஏற்றுக்கொள்ள தடையில்லை. தற்போது, கேரள வனப்பகுதிகளில் இருந்து, யானைக்கு பயிற்சி கொடுத்து, விற்பனை செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. அசாம் போன்ற மாநிலங்களிலிருந்து, பல்வேறு விதிகள் படி, யானை கொண்டு வருவது மிகவும் சிரமமான காரியமாகும். தற்போது, ஒரு யானை வாங்க, 25 லட்சம் ரூபாய் வரை செலவாகும். பல்வேறு கெடுபிடி மற்றும் கூடுதல் செலவீனம் போன்ற காரணங்களால், நன்கொடையாக யானை வழங்கும் வாய்ப்பு, மிகவும் குறைவாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.