கீழக்கரை :உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன் சமேதர் மங்களநாதர் கோயில் பழமை வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றாகும். மாணிக்கவாசகரால் பாடல்பெற்ற சிவஸ்தலமான இங்கு நாள்தோறும் நடைபெற்றுவரும் உச்சிகால பூஜை, பள்ளியறை பூஜை முக்கியத்துவம் பெற்றதாகும். குறிப்பாக, விஷேச காலங்களில் இப்பூஜையில் பங்கேற்பதற்காக வெளிமாநிலம் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். மூலவரான பச்சை மரகத நடராஜ பெருமாளுக்குரிய நித்ய பூஜைக்காக, அவரது சன்னதியின் முன்புறம் அமைந்துள்ள பீடத்தில் ஸ்படிக லிங்கம், மரகத லிங்கத்தின் மூலம் உச்சிகால பூஜையான பிற்பகல் 12 மணியளவில் ஐந்து வகையான அபிஷேக ஆராதனைகளுடன் அன்னாபிஷேகம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.பள்ளியறை பூஜை: மங்களேஸ்வரி தாயார் சன்னதியில் இரவு 8 மணியளவில் நடைபெறும் சிறப்பு அலங்கார பள்ளியறை பூஜையில் பங்கேற்பதும் சிறப்பிற்குரியதாகும். மேற்கண்ட பூஜைகள் அனைத்தும் தர்மதரிசன முறையில் நடைபெறுவதால் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.