பதிவு செய்த நாள்
24
அக்
2014
01:10
திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்துக்காக, 108 திவ்ய தேசங்களில் இருந்து புனித நீர் எடுத்து வர யாத்ரிகர்கள் குழு நேற்று பயணத்தை துவக்கியது. திருப்பூரில், சயன கோலத்தில் எம்பெருமான் அருள்பாலிக்கும் சிறப்பு வாய்ந்த, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம், டிச., 1ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, எம்பெருமாளின் சிறப்பு வாய்ந்த 108 திவ்ய தேசங்களில் இருந்து புனித மண், புனித நீர் மற்றும் திருத்துலா எடுத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.கேரளா, ஆந்திரா, கர்நாடகம், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில், சோழ நாட்டு கோவில்கள் 40; நடுநாட்டு கோவில்கள் 2; தொண்டை நாட்டு கோவில்கள் 22; மலைநாட்டு கோவில்கள் 13; பாண்டிய நாட்டு கோவில்கள் 18 ஆகியவற்றுக்கு சென்று புனித மண், துளசி தீர்த்தம் எடுத்து வருவதற்காக, நான்கு குழுக்களை சேர்ந்த 24 பேர் நேற்று வாகனங்களில் கிளம்பினர்.இக்குழுவினருக்கு வழியனுப்பு விழா நேற்று ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில் நடந்தது. மேலும், வட மாநிலத்தில் உள்ள 11 கோவில்களில் இருந்து தீர்த்தம், திருமண் எடுத்து வர தனி குழுவினர் செல்கின்றனர். நில உலகில் இல்லாத திருத்தலங்களாக திருப்பாற்கடல், திருபரமபதம் ஆகியவை உள்ளன. கும்பாபிஷேக யாக சாலை, 22 வேதிகைகள் மற்றும் 36 யாக குண்டங்களுடன் அமைய உள்ளது.