பதிவு செய்த நாள்
27
நவ
2014
01:11
தூத்துக்குடி:உலக நலனுக்காக சிவனடியார்கள் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிவகாமிஅம்பாள் உடனுறை கைலாசநாதர் கோயிலில் அதிருத்ர யாகம் டிச., 6 முதல் 12 வரை நடக்கிறது.ஸ்ரீவைகுண்டத்தில் சிவகாமிஅம்பாள் உடனுறை கைலாசநாதர் கோயில் உள்ளது. இங்கு சிவனடியார்கள் சார்பில் சனி பெயர்ச்சியை முன்னிட்டு டிச., 6 முதல் அதிருத்ர யாகம் நடக்கவுள்ளது.
சிவனடியார் பாலகணேசன் கூறியதாவது: சனி பெயர்ச்சியில் தனுசு,விருச்சிகம்,துலாம், மேஷம்,ரிஷபம், சிம்மராசியினருக்கு பாதிப்புகள் இருக்கும். இந்த ராசியினை சேர்ந்தவர்கள் அதிருத்ர யாகத்தில் கலந்து கொண்டு, மனமுருக நம்பிக்கையுடன் இறைவனை பிரார்த்தனை செய்தால் நலன் கிடைக்கும். இந்த யாகத்தில் நம் முன்னோர்களால் செய்யப்பட்ட மகா பாதகங்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
அதிருத்ர யாகத்திற்கு திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட வேதிகர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் 14,467 வகையான மந்திரங்களை 121 வேதிகர்கள் ஒரே நேரத்தில் உச்சரிப்பார்கள். 12 வேதிகள், 12 குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகம் நடத்தப்படவுள்ளது. யாகம் டிச., 6 ம் தேதி முதல் 12 வரை ஏழு நாட்கள் நடத்தப்படும். சனி பெயர்ச்சியாகும் டிச.,12 இரவு 11.52 மணி வரை நடக்கும். இறுதியில் நடத்தப்படும் பூர்ணாகுதியில் 108 வகையான திரவியங்கள் இறைவனுக்கு படைக்கப்படும்.இந்த யாகம் நடக்கும் வேளையில் சுவாமி கைலாசநாதர் ஆனந்த நிலையில் இருப்பார்.
அப்போது பக்தர்கள் வேண்டிக்கொண்ட அனைத்துக்காரியங்களும் நடக்கும். சமஸ்கிருத மந்திர உச்சரிப்பு அனைத்தையும் ஊடுறுவும் சக்தி கொண்டது. இந்த யாகத்தில் கலந்து கொள்பவர்கள் இறைவனை உணர முடியும். இவையாவும் உலக நலன்களுக்காகவும், அமைதிக்காகவும் தென் மாவட்டத்தில் முதன் முறையாக நடக்கவுள்ளது, என அவர் தெரிவித்தார்.