பதிவு செய்த நாள்
16
டிச
2014
03:12
திருத்தணி: சுந்தர விநாயகர் கோவிலின் நுழைவு வாயில் முன், கழிவுநீர் தேங்கி நிற்பதால், பக்தர்கள் கோவிலுக்குள் செல்வதற்கு அவதிப்படுகின்றனர். திருத்தணி, ம.பொ.சி., சாலையில் சுந்தர விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில், முருகன் கோவிலின் துணை கோவிலாகும். அதிகாலை 5:00 மணி முதல் இரவு 8:45 மணி வரை, கோவில் நடை திறந்திருக்கும். திருத்தணி பேருந்து நிலையம் மற்றும் நகரின் மையப்பகுதியில் இக்கோவில் உள்ளதால், தினசரி 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். இந்த நிலையில், கோவில் அருகில் உள்ள கடை வியாபாரிகள் வெளியேற்றும் கழிவுநீர், நுழைவு வாயில் முன் செல்கிறது. சில நேரங்களில் தேங்கி நிற்பதால், பக்தர்கள் கோவிலுக்குள் செல்லும் போது, தாண்டி அல்லது இறங்கி செல்ல வேண்டியுள்ளது. இதனால் பக்தர்கள் முகம் சுளித்தவாறு மூலவரை வழிபட வேண்டியுள்ளது. எனவே, பக்தர்கள் நலன் கருதி நகராட்சி நிர்வாகம், கோவில் முன் கழிவுநீர் செல்வதற்கு வசதியாக கால்வாய் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.