பதிவு செய்த நாள்
17
டிச
2014
01:12
எம்.கே.பி.நகர்: சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, கோவில்களில் நேற்று நடந்த யாகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகளில், ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். நவக்கிரகங்களில் சக்திமிக்க சனீஸ்வரன், உச்சவீடான துலாம் ராசியிலிருந்து, நேற்று பிற்பகல் 2:45 மணிக்கு, விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்தார். மேஷம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய ராசிக்காரர்கள், சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரப்பலன்களை செய்தனர்.
எம்.கே.பி.நகரில் உள்ள ஓம் சக்தி விநாயகர் கோவிலில், சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. பரிகார ராசிக்காரர்கள் யாகத்தில் பங்கேற்று வழிபட்டனர். எள் தீபம் ஏற்றியும், சனீஸ்வர பகவானை பக்தர்கள் வேண்டிக் கொண்டனர். வியாசர்பாடி, பாரிமுனை, மண்ணடி உள்ளிட்ட இடங்களில் உள்ள சிவாலயங்கள் மற்றும் நவக்கிரக சன்னிதிகளில், சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன. அதில், ஏராளமானோர் பங்கேற்று, பக்தி பரவசத்துடன் சனி பகவானை தரிசித்தனர். ஆதம்பாக்கம், ஸ்ரீ தேவி நாகமுத்து மாரியம்மன் கோவிலில், ஆறரை அடி உயரம் கொண்ட மூலவர் சனி பகவானுக்கு நேற்று அதிகாலை, 4.30 மணி முதல், இரண்டு மணிநேரம் சிறப்பு சர்வ அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, புஷ்ப அலங்காரம் நடந்தது. காலை 9:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. சனிப்பெயர்ச்சி நேரமான மாலை 2.44 மணிக்கு மூலவருக்கு அர்ச்சனை துவங்கி சிறப்பு தீபாராதனை நடந்தது. பின், பக்தர்களின் பரிகார பூஜைகள் துவக்கப்பட்டன. சைதாப்பேட்டை காரணீசுவரர் கோவில், உள்ளகரம், விநாயகர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.