மஞ்சூர் : மஞ்சூரில் ஐயப்ப விளக்கு திருவிழா விமரிசையாக நடந்தது. மஞ்சூர் ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பில், 51ம் ஆண்டு ஐயப்பன் விளக்கு திருவிழா கொண்டாடப்பட்டது. முன்னதாக, காலை சக்தி விநாயகர் கோவிலில் கணபதி பூஜை நடந்தது. இதை தொடர்ந்து ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் கொடியேற்றி அன்னதானத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து, நடந்த விளக்கு ஊர்வலம் நிகழ்ச்சியில் மாரியம்மன் கோவிலிலிருந்து சாலையின் இருப்புறங்களிலும் ஏராளமான சிறுமிகள், பெண்கள் விளக்கு தட்டுகளை ஏந்தி செல்ல, அலங்கரிக்கப்பட்ட புலி வாகனத்தில் ஐயப்பன் திருவீதி உலா சென்றார். ஊர்வலம் குந்தாபாலம், மேல்கேம்ப் வழியாக மாரியம்மன் கோவில் வளாகத்தை வந்தடைந்தது. உடன் நூற்றுக்கு மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் சரண கோஷம் முழங்க பாலகொம்பு ஏந்தி சென்றனர். இதை தொடர்ந்து பாலக்காடு குமாரி சுவாமிகள் தலைமையில் ஐயப்பன் வரலாறு, உடுக்கையடி பாடல், வாவர் துள்ளல் நிகழ்ச்சிகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை மஞ்சூர் ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.